கர்நாடகா.. ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு தேர்வு எழுத அனுமதி கேட்ட கண்காணிப்பாளர் பாத்திமா சஸ்பெண்ட்
பெங்களூர்: கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் எஸ்எஸ்எல்சி தேர்வறை பெண் கண்காணிப்பாளர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகத்தில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை கர்நாடக உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடகத்தில் நேற்று முதல் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு (இறுதித்தேர்வு) துவங்கியது. இந்த தேர்வையொட்டி மாணவிகள், ஆசிரியர்கள் ஹிஜாப்புடன் வர அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

கண்காணிப்பாளர் விடுவிப்பு
இருப்பினும் சில இடங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்தனர். ஹிஜாப் அகற்றி தேர்வு எழுதும்படி ஆசிரியர்கள் கூறினர். இதையடுத்து சிலர் தேர்வு எழுதிய நிலையில் பலர் தேர்வு எழுதாமல் வீட்டுக்கு திரும்பினர். இந்நிலையில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக நேற்று தேர்வு துவங்குவற்கு முன்பு பெங்களூரில் உள்ள சித்தகங்கா பள்ளியில் தேர்வறை கண்காணிப்பாளரான நூர் பாத்திமா பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

காரணம் என்ன
இதுகுறித்து பெங்களூரு வடக்கு பிளாக் கல்வித்துறை அதிகாரி ரமேஷ் கூறுகையில், ‛‛தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பு அந்த ஆசிரியை பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை தேர்வறைக்குள் அனுமதிக்கும்படி அவர் தலைமை கண்காணிப்பாளரிடம் வலியுறுத்தினார். இதையடுத்து அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார் " என்றார். இதுகுறித்து டிடிபிஐ(Deputy director of public instruction) சார்பில், ‛‛பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கண்காணிப்பாளர் 10 மணிக்கு தான் வந்தார். ஹிஜாப் அகற்ற அவருக்கு நேரமில்லை. இதனால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். பிற தேர்வுகளுக்கு அவர் கண்காணிப்பாளராக செயல்படலாம்'' என கூறப்பட்டது.

ஆப்சென்ட் அதிகரிப்பு
ஹிஜாப் தடைக்கு மத்தியில் நேற்று எஸ்எஸ்எல்சி தேர்வு நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் 20,994 பேர் தேர்வு எழுதவில்லை என கர்நாடக இடைநிலை கல்வி தேர்வு வாரியம் கூறியுள்ளது. இருப்பினும் அவர்கள் தேர்வு எழுதாதற்கான காரணம் குறித்த விபரங்கள் அந்த வாரியம் தெரிவிக்கவில்லை. இருப்பினும் ஹிஜாப் தடையால் தான் ஆப்சென்ட் ஆனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

8.69 லட்சம் விண்ணப்பம்
கர்நாடகத்தில் நேற்று துவங்கிய எஸ்எஸ்எல்சி தேர்வுகள் ஏப்ரல் 11 வரை நடைபெற உள்ளது. மொத்தம் 8 லட்சத்து 69 ஆயிரத்து 399 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். மாணவ-மாணவிகளின் வசதிக்காக 3 ஆயிரத்து 400 இடங்களில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தேர்வு அறைகள் ஏற்படுத்தப்பட்டன. கொரோனா பாதிப்பு, அறிகுறி உள்ளவர்களுக்கு தனி அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications