கேரளாவில் அதிர்ச்சி! பல்கலைக்கழக விழாவில் கூட்ட நெரிசல்.. 4 மாணவர்கள் பலி.. 64 பேர் படுகாயம்
திருவனந்தபுரம்: கொச்சியில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் பலியாகினர். மேலும் 64 பேர் படுகாயமடைந்தனர்.
கேரள மாநிலம் கொச்சியில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் (CSUT) பல்கலைக்கழகம் உள்ளது. இந்தக் கல்லூரியில் டெக் பெஸ்ட் எனப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் 2-வது நாளான இன்று இசை நிகழ்ச்சி ஒன்றும் நடைபெற்றது. பாடகி நிகிதா காந்தியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. திறந்த வழி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை காண நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் திரண்டு இருந்தனர்.

இசை நிகழ்ச்சியைக் காண கேட் பாஸ் வைத்து இருந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இதற்காக நுழைவு வாயிலில் நுற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டு இருந்தனர். அப்போது திடீரென மழை பெய்ததால், வாசலில் திரண்டு இருந்த மாணவ மாணவிகள் பலரும் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைய முயன்றுள்ளனர். இதனால், அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த நெரிசலில் சிக்கி 2 மாணவிகள் 2 மாணவர்கள் என மொத்தம் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 64 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களில் 2 பேரின் நிலைமை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து நிகழ்விடத்திற்கு வந்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வீணா ஜார்ஜ் கூறியதாவது:-
பலியானவர்களின் அடையாளம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பலியானவர்களில் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள இரண்டு பேர் அஸ்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். பல்கலைக்கழகத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications