அட இவர் என்ன அங்க? கேரள சட்டசபையில் அமைச்சர் பிடிஆர்.. பினராயி விஜயன் என்ன சொல்லிருக்கார்னு பாருங்க!
திருவனந்தபுரம்: கேரள சட்டமன்ற கூட்டத்தை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று பார்வையிட்டார். மேலும், K-FON திட்டம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார் அமைச்சர் பிடிஆர்.
கேரள மாநில சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளன்று கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, எந்த நடவடிக்கையும் இன்றி அவை ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று கேரள சட்டசபை மீண்டும் கூடியது. பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொது சிவில் சட்டம் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் தேவைப்படுகிறது. வெவ்வேறு சமூகங்களுக்கு தனி சட்டங்கள் என்ற இரட்டை அமைப்புடன் நாடு இயங்க முடியாது" என்றார். இதன் மூலம் மத்திய பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற தீவிரம் காட்டுவது வெளிப்படையானது.
பொது சிவில் சட்டத்தை கொண்டு வரும் மத்திய பாஜக அரசின் முயற்சிக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கேரள சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் கொண்டு வந்த பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்திற்கு வரவேற்பு தெரிவித்த காங்கிரஸ், சில திருத்தங்களை பரிந்துரைத்தது. இதைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட தீர்மானம் கேரள சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே, கேரள சட்டமன்ற கூட்டத்தை இன்று தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று பார்வையிட்டார். கேரள சட்டமன்ற கூட்டத்தின் நடைமுறைகளை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். அமைச்சர் பிடிஆர் பங்கேற்ற நிலையில் தான் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் திட்டம் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள சபாநாயகர் மற்றும் கேரள அரசு அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தினார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உடனான சந்திப்பும், K-FON திட்டம் பற்றிய ஆக்கப்பூர்வமான விவாதமும் மகிழ்ச்சி அளிக்கிறது என கேரளா முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர் பிடிஆர் உடனான சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications