மூக்குடைந்த கேரளா ஸ்டோரி படக்குழு.. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
திருவனந்தபுரம்: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியிருந்த போதே கடும் விமர்சனங்களை படக்குழு எதிர் கொண்டிருந்தது. இந்நிலையில் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியாகி சலசலப்புகளை கிளப்பியிருந்தது. இப்படி இருக்கையில் படத்தின் வெளியீடு குறித்து கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு போட்டிருக்கிறது.
கேரளாவில் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள் என்றும், ஆனால் இந்த திரைப்படம் கேரளாவின் மதச்சார்பற்ற மாண்பை சீர்குலைப்பதாகவும் ஸ்ரீதேவ் நம்பூதிரி என்பவர் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் என்பவர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், நீதிபதி சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்த திரைப்படத்திற்கு சென்சார் போட்டு U/A சான்றிதழை கொடுத்திருந்தது. இதனை நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். படத்தின் உணர்வுப்பூர்வமான கருப்பொருளுக்கு இது பொருத்தமானதா என்றும், 'ஏ' சான்றிதழ் குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
பொதுவாக கலை படைப்புகளில் தான் தலையிட விரும்புவதில்லை என்றும், இருப்பினும் இந்த திரைப்படத்தின் பெயரில் கேரளா என்று இருப்பதால் விஷயத்தில் தலையிடுவதாகவும் நீதிபதி கூறினார்.
படத்திற்கு சான்றிதழ் வழங்கிய விஷயத்தில் சென்சார் போர்டு விளக்கமளித்தது. கோவா கோன்," "ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மும்பை," "டெல்லி பெல்லி" போன்ற படங்களில் மாநில/நகரப் பெயர்கள் தலைப்புகளில் பயன்படுத்தப்பட்ட போதும் பிரச்சனை உருவாகவில்லை என்று கூறியிருந்தது. ஆனால், மேற்குறிப்பிட்ட படங்களை விட இந்த படம் மதத்தை தொட்டு செல்வதால் படம் குறித்து நீதிமன்றம் அதிக கவனம் எடுத்திருக்கிறது.
"கேரளாவில் மத நல்லிணக்கம் இருக்கிறது. ஆனால், இந்த படத்தில் கேரளாவை தவறாக சித்தரிப்பதாக மனுதாரர் கூறியிருக்கிறார். அதில் முகாந்திரம் இருப்பதாகவே தெரிகிறது" என்று நீதிபதி கூறியுள்ளார்.
ஆனால், படத்தின் தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா கூறுகையில், இந்த படம் பாதிக்கப்பட்டவர்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று கூறினார். இருப்பினும் வாதங்களை ஏற்காத நீதிபதி, படத்தின் வெளியீட்டு உரிமைகளை மாற்றவோ அல்லது விற்கவோ கூடாது என கேரள உயர் நீதிமன்றம் தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால், படத்தின் வெளியீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications