திருச்சூர் வெடி விபத்து.. பரிதாபமாக பலியான உயிர்கள்! ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் பிரதமர்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூரில் பட்டாசு ஆலை விபத்தில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்திருக்கிறார்.
திருச்சூர் மாவட்டம், முண்டத்திக்கோடு பகுதியில் உள்ள ஒரு பட்டாசு உற்பத்தி ஆலையில் இந்த வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது. புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்காகப் பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது.

நேற்று மாலை சுமார் 3:30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000 பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என மோடி அறிவித்துள்ளார்.
மீட்பு பணியில் ஏற்பட்ட சிக்கல்
ஆரம்பத்தில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து, அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அவ்வப்போது வெடித்துக் கொண்டே இருப்பதால், தீயணைப்புத் துறையினரால் ஆலைக்குள் செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டிருந்தது. மீட்புப் படையினர் ட்ரோன்களைப் பயன்படுத்திச் சேதத்தின் அளவைக் கணக்கிட்டு, இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மீட்கப்பட்டவர்கள் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மருத்துவமனையில், பேரிடர் கால நெறிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்குச் சிறப்புச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கேரளா முதல்வர் பினராயி விஜயன் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைந்து செயல்பட உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் ஷிகா சுரேந்திரன் இந்த விபத்து குறித்து விரிவான மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு விதிமுறைகள் ஏதேனும் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்துவார்.












Click it and Unblock the Notifications