'ஜெயிலர்' வில்லன் 'விநாயகன்'- பாஜக, காங். மோதல்- மீ டூவில் ஏடா கூடம்-கேரளாவை மிரட்டும் சர்ச்சைகள்!
திருவனந்தபுரம்: ஜெயிலர் திரைப்படத்தில் வர்மா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் விநாயகன் 4 மாதங்களில் மீண்டும் சர்ச்சைகளில் சிக்கி தலைப்புச் செய்தியில் இடம் பிடித்துள்ளார்.
1995-ம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விநாயகன். 2016-ம் ஆண்டு கேரளா மாநில அரசின் சிறந்த நடிகர் விருது பெற்றது முதல் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்திருக்கிறார். தமிழில் 2006-ம் ஆண்டு திமிரு படத்தில் வில்லன் குழுவின் மாற்றுத் திறனாளி கதாபாத்திரத்தில் அறிமுகமானவர். சிலம்பாட்டம் தொடங்கி உச்சமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான சூப்பர் ஹிட் படமான ஜெயிலர் படத்தில் வர்மா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தி இருந்தார்.

கேரளாவில் நடிகர் விநாயகன், சர்ச்சைகளில் இன்று நேற்றல்ல.. 2019-ம் ஆண்டு முதலே மையம் கொண்டவராகவே இருந்திருக்கிறார். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவடைந்த தருணம்.. தொட்டப்பன் என்ற படம் ரிலீஸாக இருந்தது. அந்த திரைப்படம் தொடர்பான புரமோஷன் பேட்டி ஒன்றில் விநாயகன் பகிரங்கமாக அரசியல் பேசியது பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டது.
பாஜகவுக்கு எதிரான பேச்சு: 2019 லோக்சபா தேர்தலில் கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் இடதுசாரிகள் கூட்டணி வெறும் 2 தொகுதிகளில்தான் வென்றது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த விநாயகன், லோக்சபா தேர்தலில் கேரளாவில் இடதுசாரிகள் தோல்வி அடைந்தது அதிர்ச்சி அளிக்கிறது; தாம் ஒரு இடதுசாரி ஆதரவாளர் என்றார். அத்துடன் கேரளாவில் ஒரு போதும் பாஜகவால் காலூன்றவே முடியாது என்பதையும் இந்த தேர்தலில் கேரளா மக்கள் நிரூபித்துவிட்டனர் எனவும் பெருமிதப்பட்டிருந்தார்.
இடதுசாரி ஆதரவாளர்: விநாயகனின் இந்த கருத்து அப்போது கேரளாவில் சர்ச்சையை கிளப்பிவிட்டது. விநாயகனை புறக்கணிப்போம் என்று ஒரு குரூப் களமிறங்கியது. பாஜக தரப்போ, விநாயகனை ஜாதிய அடிப்படையில் சமூக வலைதளங்களில் விமர்சித்தது. இந்த விவகாரம் அப்போது அகில இந்திய அளவில் பேசுபொருளாக மாறியது. கேரளாவில் தலித்துகளின் பிரச்சனைக்காக தொடர்ந்து குரல் கொடுக்கிற அரசியல் செயற்பாட்டாளராக, இடதுசாரி ஆதரவாளராக வெளிப்படுத்த தயங்கியது இல்லை நடிகர் விநாயகன்.
தலித் பெண் செயற்பாட்டாளர் மீது அவதூறு: இந்த சர்ச்சை நடந்த அதே கால கட்டத்தில், தலித் பெண் சமூக செயற்பாட்டாளர் ஒருவரை தொலைபேசியில் அவதூறாக விமர்சித்ததாக நடிகர் விநாயகன் கைது செய்யப்பட்டு பின்னர் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். கல்பேட்டா காவல் நிலையத்தில் இந்த பஞ்சாயத்து 2019-ல் நிகழ்ந்தது. இந்த வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் நிலுவையில்தான் இருக்கிறது.
மீ டூ விவகாரம்: அதேபோல கடந்த ஆண்டு மீ டூ பிரச்சனை குறித்து நடிகர் விநாயகன் பகீர் கருத்துகளை தெரிவித்திருந்தார். அப்போது பிரஸ் மீட் ஒன்றில், திருமணத்துக்கு முன் யாரும் உடலுறவில் ஈடுபடவில்லையா? இங்கே இருக்கிற யாராவது திருமணத்துக்கு முன் உடலுறவு வைத்திருந்தீர்களா? என பொதுவெளியிலேயே கேள்வி கேட்டார். இதற்கு செய்தியாளர்களில் ஒருவர் அப்படி எல்லாம் நான் உடலுறவு வைத்தது இல்லை என கூறிய போது அவரை இழிவுபடுத்தி பேசினார் விநாயகன். மேலும் பெண் செய்தியாளர் ஒருவரை நோக்கி, எனக்கு அந்த பெண்ணுடன் உடலுறவு வைத்து கொள்ள விருப்பம் எனில் அவரிடமும் கேட்பேன். நான் 15 பெண்களுடன் உடலுறவு வைத்திருந்தேன். ஆனால் யாரையும் கட்டாயப்படுத்தியது இல்லை என கூற பெரும் பிரளயமாகிப் போனது. இதற்கும் மலையாள திரை உலகில் எதிர்ப்பு எழுந்தது.
உம்மன் சாண்டி மறைவின் போது: 4 மாதங்களுக்கு முன்னர் கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைந்த போதும் சர்ச்சையில் விநாயகன் சிக்கினார். உம்மன் சாண்டி மறைவுக்காக கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசு 3 நாட்கள் துக்க தினம் அறிவித்தது. இது தொடர்பாக வீடியோ பதிவிட்டிருந்த நடிகர் விநாயகன், உம்மன் சாண்டி யாருங்க? அவர் மறைவுக்கு எதுக்கு இப்படி கவரேஜ் செய்யனும்? ஊடகங்கள் இதையெல்லாம் நிறுத்தனும் என ஏகத்துக்குமாக பேசியிருந்தார். இது கேரளா காங்கிரஸாரை கொந்தளிக்க வைத்தது. இதனால் நடிகர் விநாயகன் வீடும் தாக்குதலுக்குள்ளாகி பெரும் சர்ச்சையானது. பின்னர் தமது வீடியோ பதிவை விநாயகன் நீக்கி விட்டார்.
குடிபோதையில் தகராறு: இதனைத் தொடர்ந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் விநாயகன். அவர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட சண்டையால் எர்ணாகுளம் காவல் நிலையத்துக்கு போயிருந்தார் விநாயகன். அங்கு போலீசாருடன் விநாயகன் மோதலில் ஈடுபட்டாராம். மேலும் மதுபோதையில் விநாயகன் போலீசாரிடம் தகராறு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்டார். இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு பின்னர் உடனடியாக ஜாமீனில் விடுதலையானார் விநாயகன். சினிமாவில் வில்லன்.. சர்ச்சைகளுக்கு 'நாயகன்' 'விநாயகன்'!












Click it and Unblock the Notifications