துணி கடைக்குள் சிக்கிய சிட்டுக்குருவி.. உயிருடன் மீட்க நீதிமன்றம் சென்ற மக்கள்.. நெகிழ வைத்த கேரளா
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் சீல் வைக்கப்பட்ட ஜவுளிக்கடைக்குள் சிக்கிய சிட்டுக்குருவியை மீட்க நீதிமன்றத்தை பொதுமக்கள் நாடியதும், அதில் வெற்றி பெற்று சிட்டுக்குருவியை பத்திரமாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிர்களும் முக்கியம். விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் மனிதர்கள் யார் என்றே தெரியாமல் இருந்தாலும் யாரோ ஒருவர் அவரை மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றுகிறார். அதேபோல் தான் நெடுஞ்சாலைகளில் அடிபட்டு கிடக்கும் நாய், மாடுகளையும் பலரும் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பதை நாம் கேள்விப்பட்டு இருப்போம்.

இதுபோன்ற சம்பவங்கள் தான் மனிதநேயம் இன்னும் மரணிக்கவில்லை என்பதை நம்மிடம் எடுத்து கூறி கொண்டே வருகிறது. அந்த வரிசையில் மனிதநேயத்துக்கு எடுத்துக்காட்டாய் கூறும் அளவுக்கு முக்கியமான சம்பவம் ஒன்று கேரளாவில் நடந்துள்ளது. ஒரு சிட்டிக்குருவியை காப்பாற்றுவதற்காக கிராமமே நீதிமன்றத்தை நாடி அதில் வெற்றி பெற்றுள்ளது. அங்கு என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
கேரளா மாநிலம் உலிக்கல் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ஜவுளிக்கடை உள்ளது. இந்த ஜவுளிக்கடையை வைத்திருக்கும் பார்ட்னர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்த வழக்கை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம் 6 மாதத்துக்கு ஜவுளிக்கடையை இழுத்து மூடி சீல் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து அந்த ஜவுளிக்கடையின் இரும்பு ஷட்டர் கேட் இழுத்து சீல் வைக்கப்பட்டது.
இந்த ஜவுளிக்கடையில் முன்புறத்தில் இரும்பு ஷட்டர் கதவுக்கு முன்பாக கண்ணாடி கூண்டு என்பது அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூண்டில் ஜவுளிக்கடையின் புதிய வரவாக இருக்கும் துணிகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். தற்போது ஜவுளிக்கடை சீல் வைக்கப்பட்டுள்ளதால் அந்த கண்ணாடி கூண்டும் காலியாக இருந்தது.
இநு்நிலையில் தான் சிட்டுக்குருவி ஒன்று அந்த கண்ணாடிக்குள் சென்று மாட்டி கொண்டது. கடையில் உள்ள ஒரு பைப் வழியாக உள்ளே சென்ற சிட்டிக்குருவி அங்கிருந்து வெளியே வர முடியாமல் தவித்தது. சிட்டுக்குருவி அதில் சிக்கி தவிப்பதை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து வருத்தமடைந்தனர். இதுபற்றி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவின்படி கடைக்கு சீல் வைக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் மீட்க முடியாது என்று தெரிவித்து விட்டனர். சிட்டுக்குருவவியை மீட்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவியது. இதனால் வேறு வழியின்றி பொதுமக்கள் அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் குழாய் வழியாக சிட்டுக்குருவிக்கு இரை வழங்கினர்.
இதுதொடர்பான செய்தி இணையதளங்கள், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியானது. இதையடுத்து கலெக்டர் அருண் கே விஜயன் மற்றும் மாவட்ட நீதிபதி நிசார் அகமது ஆகியோர் வருத்தமடைந்தனர். அதோடு சிட்டுக்குருவியை காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து மாவட்ட நீதிபதி நிசார் அகமது சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். அதன்பிறகு கடை தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் கவனத்துக்கு இந்த விவகாரத்தை எடுத்து சென்றார். இதையடுத்து கடையை திறக்க பஞ்சாயத்து செயலாளருக்கு உத்தரவிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து சிட்டுக்குருவியை மீட்பதற்காக கடையின் சீல் உடைக்கப்பட்டு பூட்டு திறக்கப்பட்டது. கடையின் கண்ணாடி கூண்டில் சிக்கி தவித்த சிட்டுக்குருவி உயிரோடு மீட்கப்பட்டதோடு, வானில் பறக்கவிடப்பட்டது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதுபற்றி மாவட்ட கலெக்டர் நிசார் அகமது கூறுகையில், ‛‛நம் நாட்டில் சட்டம் என்பது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஒன்றாக தான் உள்ளது. ஒவ்வொரு உயிர்களையும் காப்பாற்றுவதற்கு தான் சட்டம் இருக்கிறது. ஒவ்வொரு உயிர்களும் பூமியில் வாழ வேண்டும். அது சிட்டுக்குருவிக்கும் பொருந்தும்'' என்றார். சிட்டுக்குருவியின் உயிரை காப்பாற்றுவதற்காக உலிக்கல் கிராம மக்கள், கலெக்டர் அருண் கே விஜய், மாவட்ட நீதிபதி நிசார் அகமது ஆகியோர் எடுத்த இந்த நடவடிக்கைகள் தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications