மேயராகும் எல்க்ட்ரீசியன் மகள்... எளியோரும் ஏற்றம் பெறலாம் என்பதை நிரூபித்த மார்க்சிஸ்ட் கம்யூ. ..!
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக 21 வயது இளம்பெண்ணை தேர்வு செய்து ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆர்யா ராஜேந்திரன் சாதாரண எளிய குடும்ப பின்னணியை கொண்டவர்.
தந்தை எலக்ட்ரீசியனாகவும் தாய் எல்.ஐ.சி.முகவராகவும் பணியாற்றி வரும் சூழலில், ஒரு மாநிலத்தின் தலைநகராக விளங்கும் திருவனந்தபுரத்திற்கு மேயராக வரவுள்ளார் மகள்.

மாநகர மேயர்
இந்தியாவில் இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியும் செய்யாத சரித்திர சாதனை ஒன்றை புரிந்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக 21-வயது இளம்பெண்ணான ஆர்யா ராஜேந்திரனை தேர்வு செய்து, தங்கள் கட்சியில் எளியோரும் ஏற்றம் பெற முடியும் என்பதை இந்த தேசத்திற்கு உரக்கக் கூறியுள்ளது.

உழைப்பு
இந்திய மாணவர் சங்கத்தின் கேரள மாநில குழு உறுப்பினராக உள்ள ஆர்யா ராஜேந்திரன் கட்சிப் பணிகளில் தேனீக்களை போல் சுறுசுறுப்புக் காட்டியவர். அண்மையில் நடைபெற்று முடிந்த கேரள உள்ளாட்சித் தேர்தலில் அவர் கட்சிக்காக ஆற்றிய பணியும், உழைப்பும் மட்டுமே இன்று அவருக்கான சிபாரிசாக இருந்திருக்கிறது. மற்றபடி வேறு யாரும் மேயர் பதவிக்காக ஆர்யா ராஜேந்திரனுக்கு பரிந்துரைக்கவில்லை.

எலக்ட்ரீசியன் மகள்
நாட்டின் முதல் இளம் மேயராக பொறுப்பேற்கவுள்ள ஆர்யா ராஜேந்திரன் எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தை எலக்ட்ரீசியனாக உள்ளார். இதேபோல் இவரது தாய் எல்.ஐ.சி. முகவராக உள்ளார். பெரியளவில் சொத்துக்களோ, பணபலமோ, படைபலமோ கிடையாது. இருப்பினும் இவருக்கு ஏன் வாய்ப்பு கொடுப்பட்டுள்ளது என்றால் அதில் தான் இருக்கிறது சுவாரஸ்யமே.

மாணவர்கள்
ஆர்யா ராஜேந்திரனுக்கு மேயர் பதவி கொடுக்கப்பட்டதன் மூலம் இளைஞர்கள் மற்றும் அரசியலுக்கு புதிதாக வரவிருப்பமுள்ளவர்களின் நம்பிக்கையை எல்.டி.எஃப்.கூட்டணி பெற்றிருக்கிறது. கேரளாவில் காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளில் வயதான குறிப்பிட்ட சிலர் மட்டுமே இன்னும் ஆதிக்கம் செலுத்தி வரும் சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாற்றியோசி திட்டம் பெரும் வரவேற்பையும், வாழ்த்தையும் பெற்றுள்ளது.

உழைப்பு
இதன் மூலம் கட்சிக்காக உண்மையாக உழைத்தால் யாரும் எந்தப் பதவியையும் அடைய முடியும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உணர்த்தியுள்ளது. இதனிடையே கட்சியின் அமைப்பு முறைகளிலும் பெருமளவில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது பற்றி அக்கட்சி ஆலோசித்து வருகிறது.












Click it and Unblock the Notifications