புலி பல்லுடன் தங்க சங்கிலியா? வசமாக மாட்டும் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி.. கேரள அரசு எடுத்த அதிரடி முடிவு
திருச்சூர்: பிரபல நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி, தான் கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலியில் புலி பல் கோர்த்து இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக அவருக்கு எதிராக புகார்கள் பறந்த நிலையில், சுரேஷ் கோபியின் தங்க சங்கிலியை வாங்கி ஆய்வு செய்ய வனத்துறை முடிவு செய்துள்ளது.
புலி பல் கோர்த்த தங்க சங்கிலி அணிந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்த மத்திய அமைச்சர் சுரேஷ் கோபிக்கு நோட்டீஸ் அனுப்ப வனத்துறை முடிவு செய்துள்ளது.

தங்க சங்கிலியுடன் புலிப்பல்
கேரளாவை சேர்ந்தவர் சுரேஷ் கோபி. மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள சுரேஷ் கோபி கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திரிச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கேரளாவில் இதுவரை கால் பதிக்காத பாஜகவுக்கு முதல் எம்பியாக சுரேஷ் கோபி, கேரளாவில் வென்று பாஜக தனது வெற்றி கணக்கை தொடங்க காரணமாக இருந்தார்.
இதனால், மத்திய அமைச்சர் பதவியும் சுரேஷ் கோபிக்கு கிடைத்தது. மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் பொறுப்பானது சுரேஷ் கோபிக்கு வழங்கப்படது. இந்த நிலையில்தான், சுரேஷ் கோபி சமீபத்தில் வெளியிட்ட ஒரு போட்டோவில் தனது கழுத்தில் தங்க சங்கிலியுடன் புலிப்பல் கோர்த்து இருப்பது ஒரு செயினை அணிந்து இருந்தார்.
நடவடிக்கை எடுக்க கோரி புகார்
இந்த புகைப்படத்தை இணையத்தில் கவனித்த பலரும், சுரேஷ் கோபி கழுத்தில் அணிந்து இருப்பது புலிப்பல் தான் எனவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர். திருச்சூர் வடானப்பள்ளி பகுதியை சேர்ந்த ஐஎன்டியூசி இளைஞர் பிரிவு மாநில பொதுச்செயலாளர் முகமது பாசிம் கேரள மாநில டிஜிபிக்கு புகார் ஒன்றை அனுப்பி விட்டுள்ளார்.
அந்த புகாரில், மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி புலி பல் உடன் கூடிய தங்க சங்கிலியை அணிந்து இருக்கிறார். வனம் மற்றும் வனவிலங்கு விதிகளின் படி, புலி என்பது பாதுகாக்கபட்ட விலங்கு சட்ட பட்டியலில் உள்ளது. பாரம்பரியமாக கிடைத்த புலி பல் என்றாலும் அதனை பயன்படுத்தக்கூடாது என்றே வனத்துறை சட்டம் வருகிறது.
நோட்டீஸ் அனுப்பும் வனத்துறை
எனவே, புலி பல்லுடன் தங்க சங்கிலியை அணிந்து இருக்கும் சுரேஷ் கோபி, அந்த சங்கிலி எங்கிருந்து தனக்கு கிடைத்தது என்ற விவரங்களை வெளியிட வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக சட்டத்தை மதிக்காமல் தனது கடமை தவறி புலி பல்லுடன் தங்க சங்கிலியை சுரேஷ் கோபி அணிந்து இருப்பதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில், திருச்சூர் வனத்தறை விசாரணையை தொடங்கியுள்ளது. சுரேஷ் கோபி அணிந்து இருப்பது உண்மையிலேயே புலி பல்தானா என்பதை ஆய்வு செய்ய வேண்டியிருப்பதால், அதை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications