பாம்பை கடிக்கவிட்டு மனைவியை கொலை செய்த கொடூர கணவருக்கு அதிரடி தண்டனையை வழங்கியது கேரள நீதிமன்றம்!!
திருவனந்தபுரம்: கேரளாவில் மனைவி மீது பாம்பை கடிக்கச் செய்து கொலை செய்த வழக்கில் கணவர் சூரஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ 5 லட்சம் அபராதமும் விதித்து கொல்லம் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் உத்ரா. இவருக்கும் பத்தினம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சூரஜுக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. வங்கி அதிகாரியான சூரஜ் பத்தினம்திட்டா அரூர் பகுதியில் மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார்.
கடந்த ஆண்டு மே 7ஆம் தேதி தனது தாய் வீட்டில் இருந்த உத்ரா பாம்பு கடித்து உயிரிழந்தார். 2ஆவது மாடியில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அந்த அறையில் பாம்பு வந்தது எப்படி என்ற சந்தேகம் எழுந்தது.

ஜன்னல் திறக்க வாய்ப்பில்லை
மேலும் ஏசி அறை என்பதால் ஜன்னலை திறக்க வாய்ப்பே இல்லாத நிலையில் இந்த விஷப் பாம்பு எப்படி வந்திருக்கும் என துருவி துருவி போலீஸார் சந்தேகித்த நிலையில் பல்வேறு துப்புகள் கிடைத்தன. அதாவது வழக்கமாக படுக்கைவிட்டு தாமதமாகவே எழுந்திருக்கும் பழக்கம் கொண்டவர் சூரஜ். ஆனால் மனைவி பாம்பு கடித்து இறந்த நாளன்று அதிகாலையிலேயே எழுந்த அவர் வெளியே ன்றுவிட்டதால் மேலும் சந்தேகம் வலுத்தது.

விசாரணை
விசாரணையில் வரதட்சிணைக்காக உத்ராவை பாம்பை விட்டு ஏவி கொலை செய்ததை சூரஜ் ஒப்புக் கொண்டார். மேலும் தான் ஏற்கெனவே ஒரு முறை பாம்பை ஏவி கொல்ல முயன்ற போது உத்ரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார் என்ற அதிர்ச்சி தகவலையும் அளித்தார். திருமணத்தின் போது உத்ராவுக்கு 10 லட்சம் ரூபாய் ரொக்கம், 100 சவரன் நகை, சில சொத்து பத்திரங்கள், கார் போன்றவற்றை வழங்கியுள்ளனர்.

குற்றவாளி என அறிவிப்பு
எனினும் மேலும் மேலும் வரதட்சிணை பெற முயன்ற சூரஜுக்கு ஏமாற்றமே விஞ்சியது. கேரளாவையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 1000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி மனோஜ் தலைமையிலான அமர்வில் நடைபெற்று வந்தது. நேற்றைய தினம் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் , கணவர் சூரஜ்தான் குற்றவாளி என நேற்று நடந்த விசாரணையில் அறிவித்தது.

ரூ 5 லட்சம்
பாம்பை ஏவிவிட்டு உத்ராவை கொலை செய்த குற்றத்திற்காக சூரஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் பாம்பை கடிக்க வைத்தது, ஆதாரங்களை அழிக்க முயன்றது போன்றவற்றிக்காக முறையே 7 ஆண்டுகள், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இரட்டை ஆயுள் தண்டனை முடிந்த பிறகு மேற்கண்ட 17 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி மனோஜ் தீர்ப்பளித்தார். சூரஜுக்கு தூக்கு தண்டனை கிடைக்க மேல்முறையீடு செய்வோம் என உத்ராவின் குடும்பத்தினர் தெரிவித்தனர். கொலை செய்வதற்கு உயிருடன் உள்ள ஒரு விலங்கை பயன்படுத்தியது கொலை செய்ததில் கேரளாவில் இதுதான் முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications