வைக்கம் மண்ணில் நிற்பது பெருமை..மீண்டும் ஒற்றுமையுடன் போராடுவோம்..முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
திருவனந்தபுரம்: தந்தை பெரியாரின் கருத்துக்கள் அனைவருக்கும் பொதுவானது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வைக்கம் போராட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டிய போராட்டம் என்று கேரளாவில் நடைபெற்ற வைக்கம் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு சிறப்பாக கொண்டாட இருக்கிறது. ஓராண்டு முழுவதும் அப்போராட்டத்தின் நோக்கத்தையும், வெற்றியையும் பொதுமக்கள், மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் கேரள மாநிலம் காயல் கரையோரத்தில் உள்ள மைதானத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளனர். வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
வைக்கம் போராட்டம் நடைபெற்று 100 ஆண்டுகள் ஆகிறது. மார்ச் 6ஆம் தேதி நாகர்கோவிலில் நடந்த தோள்சீலை போராட்டத்தின் 200வது ஆண்டு விழாவில் பினராயியை சந்தித்து பேசினேன். தமிழ்நாட்டுக்கு உணர்ச்சி, எழுச்சியை ஏற்படுத்திய ஊர் வைக்கம் என்று தெரிவித்தார். வைக்கம் போராட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டிய போராட்டம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
பெரியார் என்பவர் தமிழகத்திற்கு மட்டும் சொந்தமானவர் அல்ல மொழி மற்றும் நாடு கடந்தவர் பெரியார் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்து போராடினார்கள். கேரளாவில் உள்ள தலைவர்களும் தமிழ்நாட்டு தலைவர்களும் ஒன்றாக இணைந்து போராடி வெற்றி பெற்றனர்.

வைக்கம் போராட்ட வரலாற்றை சுட்டிக்காட்டி பேசிய முதல்வர் ஸ்டாலின், சுயமரியாதை சமூக நீதி நிலமான வைக்கம் மண்ணில் இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். வெற்றி பெருமிதத்தோடு இந்த வைக்கம் மண்ணில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் கோயில் நுழைவு போராட்டங்களை நடத்த தூண்டுகோலாக இருந்தது வைக்கம் போராட்டம் என்றும் தெரிவித்தார்.
அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களை தலைநிமிர வைக்க கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் பல்லாண்டு காலமாக சீர்திருத்த இயக்கம் பல்லாண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. இதனை சீர்திருக்க இயக்கம் என்று மட்டும் சொல்லிவிடமுடியாது இதுதான் புரட்சி இயக்கங்கள். நாராயண குரு, குமாரான் ஆசான் உள்ளிட்ட தலைவர்களால் வரிசையாக நடத்தப்பட்டது. இவர்கள் அனைவரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியுள்ளனர். தமிழ்நாட்டில் புரட்சி இயக்கமானது ராமலிங்க வள்ளலார், அய்யா வைகுண்டர், பண்டித அயோத்தி தாசர், தந்தை பெரியார் ஆகிய தலைவர்களால் வரிசையாக நடத்தப்பட்டது.
கேரளாவின் டி.கே.மாதவன்,தமிழ்நாட்டினைச் சேர்ந்த தந்தை பெரியாரும் இணைந்து நடத்திய போராட்டம்தான் வைக்கம் போராட்டம். ஒடுக்கப்பட்ட மக்கள் வைக்கம் கோவில் தெருவில் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அதை உடைக்க ஒன்றரை ஆண்டுகாலம் போராட்டம் நடைபெற்றது. 1924 ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி தடையை மீறி தெருவிற்குள் நுழையும் சத்யாகிரகம் தொடங்கப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டனர். தந்தை பெரியார் இந்த மண்ணிற்கு வந்தார். எந்த மன்னராட்சிக்கு எதிராக போராட பெரியார் வந்தாரோ அந்த மன்னராலேயே பெரியார் வரவேற்கப்பட்டார். ஏனென்றால் அந்த மன்னர் குடும்பத்திற்கு தந்தை பெரியாரை நன்கு தெரியும். மன்னர் குடும்பத்தினருடன் நட்பாக இருந்தாலும் மன்னருக்கு எதிராகவே போராடினார் தந்தை பெரியார். வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க தமிழ்நாட்டை மறக்காமல் அழைத்துள்ளது எனக்கு பெருமை என்றும் கூறினார்.
கேரளா முழுவதும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தடையை மீறி பேசியதால் கைது செய்யப்பட்டார். சிறை சென்றாலும் வைக்கம் சென்று போராடினார். போராட்டத்தில் கைதான மற்ற தலைவர்கள் அரசியல் கைதியாக நடத்தினார்கள். பெரியார் மிக மோசமாக நடத்தப்பட்டார். தமிழ்நாட்டில் பிறந்து விட்டதால் தந்தை பெரியார் தமிழ்நாட்டுக்கு மட்டுமே உரிய தலைவர் அல்ல. இந்தியாவிற்கு மட்டுமான தலைவர் அல்ல உலகம் முழுவதுக்குமே உரிய தலைவர் என்றும் தந்தை பெரியாரை பற்றி பெருமையுடன் கூறினார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
மீண்டும் சனாதன வர்ணாசிரம சாதிய மதவாத சக்திகள் கோலோச்ச நினைக்கிறார்கள். வைக்கம் போராட்டம் கலங்கரை விளக்கம். நூறாண்டுகளுக்கு முன்பு எப்படி ஒற்றுமையுடன் போராடினோமோ அதே போல மீண்டும் ஒற்றுமையுடன் போராடுவோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications