கேரளா நிலச்சரிவு.. மிக கனமழை, நெட்வொர்க் இல்லாதால் 8 மணி நேரம் வெளியில் தெரியாத கொடுமை
இடுக்கி: கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு, கனமழை மற்றும் நெட்வொர்க் கிடைக்காத காரணத்தால் சுமார் 8 மணி நேரத்திற்கு பிறகே அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதாக அதிர்ச்சியான தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழையால் மூணாறில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஜமலையில் (பெட்டிமுடி பகுதி) ஏற்பட்ட நிலச்சரிவில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இன்னமும் 30 பேரின் உடல்கள் மீட்கப்பட வேண்டியுள்ளது. மீட்பு பணிகள தொடர்ந்த நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து நடந்து வருகிறது.

கடுமையான மழை
இது தொடர்பாக தேயிலைத் தோட்ட நிறுவனத்தின் பெட்டிமுடி பிரிவின் மேற்பார்வையாளர் செந்தில்குமார் கூறுகையில், நிலச்சரிவு ஏற்பட்ட ஒரு மணி நேரம் கழித்தே எனக்கு தகவல் கிடைத்தது. ஆகஸ்ட் 4 முதலே இடுக்கி மாவட்டம் முழுவதும் கடுமையாக மழை பெய்து வந்தது. குறிப்பாக நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வந்தது.

வெள்ளம் வந்தது
வழக்கமாக இங்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் இரவு 8.30 மணிக்கெல்லாம் தூங்க சென்று விடுவார்கள். அன்று இரவு 10.45 மணியளவில் தோட்டத்தில் வேலை பார்த்த சில இளைஞர்கள் அவர்களது வீடுகளுக்கு அருகே வெள்ளம் பெருக்கெடுத்து வருவதை கவனித்தார்கள். அதை கீழேயுள்ள குடியிருப்பில் வசிப்பவர்களிடம் கூறி எச்சரிப்பதாக விரைந்து சென்றுள்ளனர். ஆனால் அடுத்த சில நொடிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு தூங்கிக் கொண்டிருந்த சுமார் 80க்கும் மேற்பட்ட மக்கள் வசித்த குடியிருப்பு மண்ணுக்குள் புதைந்துள்ளது.

மொபைல் நெட்வொர்க்
சாலைகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கி இருந்தது., சில இடங்களில் பாறைகளும் மற்றும் மரங்களும் விழுந்து கிடந்தது. அவர்கள் என்னிடம் வந்து தகவல் சொல்ல ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது. உடனே நான் எங்கள் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு தெரிவிக்க முயன்றேன். ஆனால கன மழையினால் மொபைல் நெட்வொர்க் வேலை செய்யவில்லை.

மலை உச்சிக்கு சென்றோம்
இதனால் அடுத்தாக அங்கிருந்து உதவி வேண்டி மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள ராஜமலைக்கு சென்று உதவி மேலாளரின் வீட்டிற்கு நானும், சிலரும் நடந்தே சென்றோம். மழை மற்றும் வெள்ளத்தை கடந்தபடி அங்கு செல்ல எங்களுக்கு நான்கு மணி நேரம் ஆனது.. அங்கும் மொபைல் நெட்வொர்க் கிடைக்கவில்லை. இதனால் அங்கிருந்து இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மழை உச்சிக்கு சென்றோம். காலை 7 மணி அளவில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தோம். அதிகாரிகள் காலை 11 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அதன் பிறகு மீட்பு பணிகள் ஆரம்பமானது" இவ்வாறு செந்தில் குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications