நடிகர் மோகன்லாலுக்கு திடீர் உடல் நலக்குறைவு.. மூச்சுத்திணறல், காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதி
திருவனந்தபும்: மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்லாலுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தீவிர காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மோகன்லால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் மோகன்லால். தனது அசாத்திய நடிப்புத்திறனால் மலையாள சினிமா ரசிகர்கள் மட்டும் இன்றி தமிழகத்திலும் அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. 64- வயதான மோகன்லால் இன்று திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிக காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மோகன்லாலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுவாச நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் மோகன்லால் உடல் நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மோகன்லாலுக்கு அதிக காய்ச்சலுடன் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. அவருக்கு சுவாச தொற்று இருக்க வாய்ப்புள்ளது. அடுத்த 5 நாட்கள் பொது நிகழ்ச்சியில் எதிலும் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மோகன்லால் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
எல் 2, எம்புரான் படங்களின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், முதல் முறையாக தான் இயக்கி இருக்கும் பர்ரோஸ் படத்தின் புரமோஷன் பணிகளுக்காக குஜராத்தில் இருந்து கொச்சிக்கு மோகன்லால் திரும்பினார். அப்போது அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. தீவிர காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் உடனடியாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மோகன் லால் அனுமதிக்க்கப்பட்டார்.
தற்போது அவரது உடல் நலம் தேறி வருவது மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. மலையாளம், தமிழ், கன்னட உள்ளிட்ட மொழிகளில் சுமார் 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மோகன்லால். தமிழில் இருவர், விஜய்யுடன் ஜில்லா, கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன், ரஜினிகாந்தின் ஜெயிலர் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் மோகன்லால், முதல் முறையாக படம் ஒன்றையும் இயக்கியுள்ளார். 'பரோஸ்' என்ற படத்தை மோகன்லால் முதன் முதலாக இயக்கியுள்ளார். வாஸ்கோட காமாவின் பொக்கிஷங்களைப் பாதுகாத்த, பாதுகாவலரான பரோஸ் என்பவரின் வாழ்க்கை கதைதான் இந்தப் படம் என்று சொல்லப்படுகிறது. இந்த படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications