கேரளாவில் முதல் பயணத்திலேயே ஷாக்.. வந்தே பாரத் ரயில் பெட்டிக்குள் மழைநீர் கசிவு.. பயணிகள் அதிர்ச்சி
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரையிலான வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த புதிய வந்தே பாரத் ரயிலின் பெட்டிக்குள் மழை நீர் கசிந்துள்ளது. இது குறித்த தகவல் பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. புதுடெல்லி- வாரணாசி இடையே பிரதமர் மோடி துவங்கி வைத்த இந்த ரயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் நாடு முழுவதும் அடுத்தடுத்து வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்திலும் சென்னை- மைசூர், சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை பல்வேறு வசதிகளை கொண்டதாகும். முழுவதும் ஏசி வசதி கொண்ட இந்த வந்தே பாரத் ரயிலில், விமானத்திற்கு நிகரான வசதிகள் உள்ளன. சொகுசு இருக்கைகள், அடுத்தடுத்த வரும் ரயில் நிலையங்கள் பற்றிய அறிவிப்பு என பயணிகள் வசதிக்காக பல்வேறு வசதிகள் வந்தே பாரத் ரயிலில் செய்யப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரயிலில் இன்ஜின் தனியாக இல்லாமல் ரயிலுடன் இணைந்தே இருக்கும். வைஃபை, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ தகவல் வசதிகள், பயோ-கழிவறைகள் என பல நவீன வசதிகள் உள்ளன. இந்த நிலையில், கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். திருவனந்தபுரம் - காசர்கோடு இடையே இந்த ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
நாட்டின் 15 வது வந்தே பாரத் ரயில் இதுவாகும். கேரளாவில் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில் என்பதால் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. வந்தே பாரத் ரயிலிலும் பயணிகள் போட்டி போட்டு முன்பதிவு செய்து ஆர்வமாக பயணம் செய்து வருகின்றனர். இதனிடையே, திருவனந்தபுரம் - காசர் கோடு இடையே இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலின் முதல் பயணத்திலேயே மழை நீர் கசிந்துள்ளது பயணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

முதல் பயணத்தை நிறைவு செய்த பிறகு வந்தே பாரத் ரயில் கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அங்கு கனமழை பெய்தது. கனமழையால் வந்தே பாரத் ரயிலின் ஒரு பெட்டியில் மழை நீர் ஒழுகியது. இதையடுத்து விரைந்து செயல்பட்ட ரயில்வே ஊழியர்கள் பிரச்சினையை சரி செய்தனர். இது குறித்து ரயில்வே அதிகரிகள் கூறுகையில், ஏசி வென்ட் வழியாக மழை நீர் கசிந்துள்ளது. ஒரே ஒரு பெட்டியில் மட்டுமே இந்த பிரச்சினை இருந்தது.
மற்றபடி வேறு பழுது எதுவும் இல்லை. உடனடியாக சரி செய்யப்பட்டது என்றும் அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர். விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகள் கொண்டதாக அறியப்படும் வந்தே பாரத் ரயிலுக்குள் மழைநீர் கசிந்த தகவல் பயணிகள் மத்தியில் ஆச்சர்யத்துடன் பரபரப்பாகவும் பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications