வயநாடு தேர்தல்.. பிரியங்கா காந்தியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை அறிவித்தது பாஜக!
திருவனந்தபுரம்: வயநாடு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடும் நிலையில், பாஜக இன்று வேட்பாளரை அறிவித்துள்ளது. பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவார் என்று அக்கட்சி தலைமை அறிவித்து இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலுமே வெற்றி பெற்றார். இதனால், வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியாக இருந்தது.

இந்த நிலையில், வயநாடு தொகுதிக்கு வரும் நவம்பர் 13 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அக்கட்சி தேர்தலுக்கு முன்பே அறிவித்துவிட்டது. இதனால், அந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றதால், நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது. பிரியங்கா காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் நடிகை குஷ்பு நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
உத்தேச வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளதாக மலையாள செய்தி சேனல்களில் செய்திகள் பரவின. ஆனால் இந்த தகவலை குஷ்பு முற்றிலும் மறுத்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தேர்தல் என்று வந்தாலே போதும், இதுபோல வதந்திகள் பரவத்தான் செய்கின்றன. எல்லா தேர்தல்களிலும் இந்த வதந்திகள் பரவுகின்றன. இப்போதும் அதுபோலவே ஒரு வதந்தி பரவுகிறது.
கேரள மாநிலம் வயநாட்டில் நான் போட்டியிட போவதாக பேசப்படுகிறது. இதுவரை அந்த மாதிரி ஒரு தகவல் குறித்து கட்சி மேலிடம் என்னிடம் பேசவில்லை” என்றார். இந்த நிலையில், இன்று பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications