மூடிவிட்ட மண்ணில் மூழ்கிய மனித உடல்கள்.. வயநாட்டில் திரும்பும் திசையெல்லாம் கோரம்! உதவி எண் அறிவிப்பு
திருவனந்தபுரம்: வயநாட்டில் மீட்பு பணிகள் தீவிரம் எடுத்துவரும்நிலையில், தேசிய சுகாதார இயக்கம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு உதவிகளை வழங்க கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது..
வயநாட்டில் கடந்த ஒரு மாத காலமாகவே, தென்மேற்கு பருவமழை விடாமல் பெய்து வருகிறது.. இதனால், அங்குள்ள காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வானிலை மையமும் கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ரெட் அலர்ட் வெளியிட்டவாறே இருந்தது.

இதனால் கடந்த சில நாட்களாகவே, மலைப்பிரதேசமான வயநாடு மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன.. கேரள மாநிலம் வயநாட்டின் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வயநாடு: ஆனால், இன்று அதிகாலையில் மொத்தம் 3 இடங்களில் அடுத்தடுத்து மிகப்பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டுவிட்டன.. சூரல் மலை, மேப்பாடி, முண்டகை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில், ஏராளமான உயிர்கள் மண்ணுக்கடியில் புதைந்துவிட்டனர்..
மலைப்பகுதிக்கு அருகே உள்ள வீடுகள் மீது மண் சரிந்து விழுந்ததில், நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டுவிட்டனர்.. 300க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகியிருக்கின்றன.. கன மழை மற்றும் இருள் சூழ்ந்த நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற நிலச்சரிவால் மக்களால் தப்பிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அந்த பகுதிகளிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கி தவித்து வருகிறார்கள்..
மீட்பு பணி: இவர்களை மீட்கும் நடவடிக்கையில், மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்... இதுவரை 20-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் ஆனால், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் பெய்து வரும் மழையால், மீட்பு பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். குறிப்பாக, மிகப்பெரிய நிலச்சரிவால் கல்பட்டா, மேப்பாடி போன்ற பகுதிகளுக்கு மீட்பு படைகள் செல்ல முடியவில்லையாம்.
எனினும், பல இடர்பாடுகளுக்கு மத்தியில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று காலையிலிருந்தே மழையின் தீவிரம் அதிகமாக இருந்தது.. எவ்வளவு பெரிய பாதிப்பு எவ்வளவு பேர் உயிரிழப்பு என்பதை கணக்கிட முடியாத நிலைமை உள்ளது.. ஹெலிகாப்டர் மற்றும் ராணுவ உதவி தேவைப்படுகிறது என்கிறார்கள் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள்.
உதவி எண்கள்: இந்நிலையில் தேசிய சுகாதார இயக்கம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.. 9656938689 மற்றும் 8086010833 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல்கள பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவில் பாலங்களும் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன.. அதனால், அங்கு மீட்புக்குழுவினர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. எனவே, விமானப்படை உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளது... சூலூர் பகுதியில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் செல்கின்றன.
மீண்டும் நிலச்சரிவு: ஆனால், வயநாடு பகுதியில் கன மழை பெய்து வருவதால், மறுபடியும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது... எனவே, பல்வேறு இடங்களிலிருந்து மீட்பு பணிக்கு அனுப்பப்பட்ட ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரதமர் மோடி, நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவுவதற்காக தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், முதல்வர் பினராயி விஜயனிடம் பேசி மத்திய அரசின் அனைத்து உதவிகளையும் அளிக்க உறுதியளித்திருப்பதாகவும் உறுதி தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை பெங்களூரில் இருந்து வயநாடு விரைந்துள்ளது. வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு உதவிகளை வழங்க கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.. அதேபோல, கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை மையத்திலிருந்து 2 விமானப்படை ஹெலிகாப்டர்கள் வயநாட்டில் மீட்புப் பணிகளுக்கு உதவிட அனுப்பப்பட்டுள்ளன. இன்று காலை 7.30 மணியளவில் அந்த ஹெலிகாப்டர்கள் வயநாட்டுக்கு புறப்பட்டு சென்றன.
அதேபோல, கேரள மாநிலம் வயநாட்டில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ள நிலையில், நிலச்சரிவில் சுமார் 100 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பல்வேறு சிக்கல்களுக்கு இடையே, மீட்பு பணிகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நிலச்சரிவில் சிக்கி காயம் அடைந்த 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்












Click it and Unblock the Notifications