வயநாடு நிலச்சரிவில் 16 பேரை இழந்த பெண்.. ஒவ்வொரு முறையும் சடலத்தை அடையாளம் காட்டும் கொடுமை
திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவு கோரம் குறித்த தகவல்கள் வெளியாகி தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த முண்டக்கை கிராமத்தில் தன்னுடைய உறவினர்கள் 16 பேரை இழந்த பெண் ஒருவரின் கண்ணீர் கதை மனதை ரணமாக்குகிறது.
இந்த காலன் தான் எவ்வளவு கொடூரமானது. வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி முழுவதும் சோகங்களே நிறைந்துள்ளன. மீட்புப் பணிகள் 6வது நாளாக இன்று தொடர்ந்து கொண்டிருக்கிறது. சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் நிலை குறித்து தெரியவில்லை. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் பின்னணியிலும் பெரும் சோகம் இருக்கவே செய்கிறது. அதிலும் முண்டக்கை பகுதியைச் சேர்ந்த நௌசீபாவின் கதை மிகவும் துயரமானது. நிலச்சரிவில் தன்னுடைய அப்பா, அம்மா, உடன்பிறந்த அண்ணன், சகோதரிகள் உள்ளிட்ட 11 பேரை ஒரே இரவில் இழந்து தவிக்கிறார்.

நெளசீபா தான் பிறந்த வீட்டில் மட்டுமல்ல, அவரின் கணவர் குடும்பத்திலும், மாமியார், நாத்தனார், அவர்களின் குழந்தை என 5 பேரை இழந்திருக்கிறார். உறவுகளை இழந்து கண்ணீரில் சிவந்த கண்களுடன் கடந்த 5 நாட்களாக மேப்பாடி அரசு மருத்துவமனை முன்பு நின்று கொண்டிருக்கிறார். ஒவ்வொருமுறை ஒரு சடலம் வரும்போதும், அது அவர்களின் உறவினருடையதா என்று அடையாளம் காட்டும் கொடுமையான பொறுப்புகளையும் அவர் கையாள வேண்டியுள்ளது.
"எங்கள் வீடு இருந்த இடத்தில் இப்போது ராட்சத பாறைகள் ஆக்கிரமித்துள்ளன. என் குடும்பத்தில் இருந்த அனைவரையும் இழந்துவிட்டேன். கடுமையான மழை பெய்து கொண்டிருந்ததால் எஸ்டேட் அருகே தங்கியிருந்த என் அண்ணன் குடும்பம் உள்ளிட்ட அனைவரும் முண்டக்கை மசூதி அருகே உள்ள என் அப்பாவின் வீட்டுக்கு வந்துள்ளனர். அன்றைய தினம் 11 பேர் அங்கிருந்துள்ளனர். நிலச்சரிவில் ராட்சத பாறைகள் தாக்கி, தரைமட்டமாக்கி, எங்கள் வீடு இருந்த தடயமே தெரியாமல் போய்விட்டது. தற்போதுவரை என் அப்பா, அம்மா உள்ளிட்ட 4 பேரின் உடல்கள்தான் அடையாளம் காணப்பட்டுள்ளன. மற்றவர்களின் உடல் கிடைக்கவில்லை.
அன்றைய தினம் நான் என்னுடைய கணவர் வீட்டில் இருந்தேன். இல்லையென்றால் இந்நேரம் நானும் உயிருடன் இருந்திருக்க மாட்டேன். அங்கு நிலவிய சத்தங்களை கேட்டு அருகில் ஒரு பாதுகாப்பான இடத்துக்குச் சென்று இரவு முழுவதும் காத்திருந்தோம். உயிரிழந்த சகோதரிகளில் ஒருவருக்கு செப்டம்பர் 22ஆம் தேதி திருமணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications