மனித கறியை கீறி.. மசாலா தடவி.. குக்கரில் சமைத்து சாப்பிட்ட சம்பவம்.. கேரள நரபலியை மறக்க முடியுமா?
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக பெண் உள்பட இரு பெண்கள் மிக கொடூரமான முறையில் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் 2022 ஆம் ஆண்டில் மிக கொடூர கொலையாக கருதப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு இப்போதுதான் தொடங்கியது போல் இருக்கிறது. ஆனால் தொபுக்கடீர் என டிசம்பர் மாதம் வந்துவிட்டது. இன்னும் 29 நாட்களில் இந்த ஆண்டே முடிந்துவிடும். அந்த வகையில் இந்த ஆண்டில் நடந்த கேரளாவையே உலுக்கிய ஒரு சம்பவத்தை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் எலாந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரோஸ்லின். இவருக்கு 50 வயது. இவர் லாட்டரி சீட்டு தொழில் செய்து வந்தார். இவரை கடந்த செப்டம்பர் மாதம் முதல் காணவில்லை. இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லாவை சேர்ந்த பகவந்த் சிங், அவருடைய மனைவி லைலா, முகமது ஷபி ஆகிய மூவரை கைது செய்தனர்.
முகத்த பாக்க முடியலையே..கதறித் துடித்த உறவினர்கள்! நரபலி கொடுக்கப்பட்ட பத்மா உடல் சொந்த ஊரில் தகனம்!
விசாரணையில் திடுக்
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக் தகவல்கள் கிடைத்தன. காணாமல் போன ரோஸ்லினை நரபலி கொடுத்ததாக மூவரும் ஒப்புக் கொண்டனர். அது போல் கடந்த ஜூன் மாதம் தமிழகத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணையும் நரபலி கொடுத்ததாக பகீர் தகவலை அவர்கள் அளித்தனர். அவர்களின் சடலங்கள் எங்கே என கேட்டபோது அவர்கள் கூறிய தகவல் போலீஸாரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியது.
மசாஜ் சிகிச்சை
பகவந்த் சிங் திருவல்லா பகுதியில் மசாஜ் சிகிச்சை அளிக்கும் மருத்துவர். இவரது மனைவி லைலா சிங். இவர்களுக்கு முகமது ஷபி என்பவர் பழக்கம் ஏற்பட்டுள்ளது. குறுகிய வழியில் பணக்காரர்களாக ஆசைப்பட்ட டாக்டர் தம்பதியிடம், நரபலி கொடுத்தால்தான் செல்வச் செழிப்பு ஏற்படும் என ஐடியா கொடுக்க, இதை நம்பிய டாக்டர் தம்பதியினர் நரபலிக்கு ஆட்களை கூட்டி வரும் பொறுப்பையும் முகமது ஷபியிடம் ஒப்படைத்தனர்.
முகமது ஷபி
அப்படி முகமது ஷபிக்கு பழக்கமானவர்கள்தான் கேரளாவை சேர்ந்த ரோஸ்லினும் தருமபுரியை சேர்ந்த பத்மாவும்! இவர்கள் இருவரும் கூலித் தொழில் செய்யும் நேரம் போக மீதமுள்ள நேரத்தில் லாட்டரி தொழிலும் செய்து வந்தனர். அப்போதுதான் இருவருக்கும் முகமது ஷபியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் ஏதோ பெரிய வேலை வாங்கி தருவதாக இருவரையும் தனித்தனியே பகவந்த் சிங்கின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
நிர்வாணம்
அங்கு அந்த இரு பெண்களையும் நிர்வாணமாக கட்டி போட்டு அவர்களுக்கு செக்ஸ் டார்ச்சரையும் முகமது ஷபி கொடுத்துள்ளார். பின்னர் அவர்களின் பிறப்புறுப்பில் இரும்பு ராடை சொருகி மிக கொடூரமாக கொன்றுள்ளனர். இந்த கொடூர சம்பவத்தை செய்த போது லைலாவும் உடனிருந்தார் என்பதை யாராலும் நம்ப முடியவில்லை. பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை தட்டி கேட்டு வரும் நிலையில் ஒரு பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு ராடை செருகியது இன்னொரு பெண் என்ற தகவல் நாட்டையே உலுக்கியது.
56 துண்டுகள்
அந்த இரு பெண்களும் கொல்லப்பட்டவுடன் அவர்களில் ஒருவரை 56 துண்டுகளாக வெட்டிய மூவரும் அந்த நர மாமிசத்தை பிரிட்ஜில் வைத்து சேமித்து வைத்தனராம். பின்னர் இந்த நரமாமிசத்தை உண்டால் மட்டுமே செல்வச் செழிப்பு கிடைக்கும் என முகமது ஷபி சொன்னதை நம்பி நரமாமிசத்தில் ஆங்காங்கே கீறி மசாலா தடவி குக்கரில் போட்டு சமைத்து சாப்பிட்டதாகவும் இவர்கள் சொன்ன வாக்குமூலம் நாட்டு மக்களை அதிர வைத்தது.
மஞ்சள் செடி
அந்த பெண்களின் தலையெங்கே என கேட்ட போது அவர்கள் மூவரையும் அழைத்து கொண்டு பகவந்த் சிங்கின் வீட்டிற்கு போலீஸார் சென்றனர். அங்கு தோட்டத்தில் தலையை புதைத்து அதன் மேல் மஞ்சள் செடி நட்டு வைக்கப்பட்டிருந்தது. இதை தோண்டும் பணிகளில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீட்டைச் சுற்றிலும் மஞ்சள் செடி இருந்ததை பார்த்த போலீஸார் அதிர்ந்தே போய்விட்டனர். சிகப்பு ரோஜா படத்தில் ஒவ்வொரு பெண்களாக கொன்று புதைத்து அதன் மேல் சிகப்பு ரோஜாவை கமல்ஹாசன் நடுவது போன்று கதை அமைந்திருக்கும். அந்த படத்தை இந்த நரபலி சம்பவம் நம் கண் முன் கொண்டு வந்துள்ளது.