வெளிநாட்டு விசா.. நூதன மோசடி.. ரூ.5 லட்சத்திற்காக பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞர்.. தூக்கிய போலீஸ்!
திருவனந்தபுரம்: வெளிநாட்டுக்கு செல்ல விசா ஏற்பாடு செய்து தருவதாக சொல்லி ஏமாற்றியதாக கூறி இளைஞர் ஒருவர் டிராவல்சில் புகுந்து தாக்குதல் நடத்தியதில் இளம்பெண் படுகாயமடைந்துள்ளார். இளம்பெண்ணின் கழுத்தில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளதால் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவின் எர்ணாகுளம் அருகே உள்ள பள்ளுருத்தியைச் சேர்ந்தவர் ஜோலி. இவர் கடந்த 2019 ஆண்டு ரவிபுரத்தில் உள்ள டிராவல்ஸ் ஏஜென்சியில் லிதுவேனியாவுக்கு செல்ல வேண்டும் என்று கூறி விசாவுக்கு அப்ளை செய்திருந்தார். இதற்காக ரூ.5 லட்சம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இவர் எதிர்பார்த்ததைப் போலவே விசா கைக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் அது கோவிட் பரவிய காலகட்டமாகும்.
எனவே ஜோலி எங்கும் செல்லாமல் கேரளாவிலேயே இருந்திருக்கிறார். இதனால் விசாவும் காலாவதியாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கொரோனா தொற்று பரவல் குறைந்தவுடன் மீண்டும் வெளிநாடு செல்ல வேண்டும் என்று டிராவல்ஸை அணுகியுள்ளார். ஆனால் இவருக்கு உடனடியாக விசா ஏற்பாடு செய்யப்படவில்லை. எனவே சில நாட்கள் காத்திருந்திருக்க வேண்டும் என்று டிராவல்ஸ் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
விசா
ஆனால் ஏறத்தாழ ஓராண்டு காத்திருந்தும் விசா கிடைக்காததால் அடிக்கடி டிராவல்ஸ் அலுவலகத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்படியாக இன்று காலையும் வந்திருக்கிறார். டிராவல்ஸ் அலுவலகத்தில் வரவேற்பறையில் இருந்த பணிப்பெண் ஒருவர் என்ன விவரம் என்று கேட்க, ஜோலி, டிராவல்ஸ் ஓனர் முகமது அலியை காண வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் ஓனர் இங்கு இல்லையென்றும், எனவே ஓனர் வரும்போது வாங்க என்றும் சொல்லியனுப்பியுள்ளார். ஆனால் ஓனரை பார்க்காமல் தான் செல்ல மாட்டேன் என்று ஜோலி சத்தம் போட அந்த இடம் கொஞ்ச நேரத்தில் பெரும் பரபரப்படைந்துள்ளது.
கத்தி குத்து
இதனையடுத்து ஜோலி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வரவேற்பறையில் இருந்த இளம்பெண்ணின் கருத்தை அறுத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத இளம்பெண் வலியில் அலறிக்கொண்டே எதிரில் இருந்த ஓட்டலுக்கு ஓடியுள்ளார். அங்கிருந்தவர்கள் கும்பலாக சேர்ந்து வந்து ஜோலியை கேள்வி கேட்டுள்ளனர். ஜோலி, தான் ரூ.5 லட்சத்தை இழந்ததாகவும் எனவே டிராவல்ஸ் ஓனரை உடனடியாக பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அங்கிருந்து தப்பிக்காமல் ஓனர் வரும் வரை காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து திடீரென ஓனர் முகமது அலி டிராவல்ஸ் அலுவலகத்திலிருந்து வெளியே வந்து தப்பி ஓடியுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
சுற்றி இருந்தவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து அங்கிருந்து பாதிக்கப்பட்ட பெண்ணை தங்களது வாகனத்தில் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லையென்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மற்றொருபுறம் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஜோலியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதேபோல டிராவல்ஸ் ஓனர் முகமது அலியிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மனநலம் பாதிப்பு
இதில் முகமது அலி கூறியதாவது, "லிதுவேனியாவுக்கு செல்வதற்கு ஜோலி என்னிடம் சுமார் ரூ.34,000 ரூபாயை கொடுத்தார். அதை நான் திருப்பி கொடுத்துவிட்டேன். என்னிடம் அவர் ரூ.5 லட்சம் கொடுத்ததாக கூறுவது முற்றிலும் பொய். இந்த டிராவல்ஸை 16 ஆண்டுகளாக நான் நடத்தி வருகிறேன். இதற்கு முன்னர் இதுபோன்ற புகார்கள் எதுவும் வந்ததில்லை. ஆனால் தற்போது ஜோலி தவறான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அவருக்கு மனநோய் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.