கொடைக்கானல் டூர் போறீங்களா.. இந்த ரூட்ல மட்டும் தப்பித்தவறி கூட இப்போது போயிடாதீங்க
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அடுக்கம் வழியாக தேனி மாவட்டம் பெரியகுளம் செல்வதற்கான மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன. அடுக்கம் மலைப் பாதையில் தற்போது ராட்சத பாறைகள் விழுந்துள்ளால் சீரமைக்க 3 நாட்களாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
'மலைகளின் இளவரசி'யான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலம் ஆகும். இங்கு சுற்றிப்பார்க்க ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. அடர்ந்த பசுமையான வனப்பகுதிகள், ஆறுகள், அருவிகள், சவுக்குதோப்புகள், மனதை மயக்கும் மலைகள், எப்போது வேண்டுமானாலும் வரும் மழைகள், அடிக்கடி வந்து செல்லும் மஞ்ச மூட்டம், அற்புதமான காலநிலை என பார்க்கவே ரம்மியாக இருக்கும்.

அதேநேரம் இங்கு அக்டோபர், நவம்பர் மாதங்களில் கனமழை பெய்வது வழக்கம். இதனால் அருவி முதல் ஆறு வரை வெள்ளம் பாய்ந்தோடும். கண்களுக்கு விருந்தாக இருக்கும் பசுமை வனப்பகுதிகளில் அடிக்கடி மரங்கள் முறிந்து விழும். நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பாறைகள் உருண்டு விழும். அந்த வகையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பாதையில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளன, பாறைகள் உருண்டு விழுந்துள்ளன. இதன் காரணமாக போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கொடைக்கானலில் இருந்து பெருமாள்மலை, அடுக்கம் வழியாகவே தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு செல்வதற்கு மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதையில் உள்ள அடுக்கம் பகுதியை பொறுத்தவரை மிகவும் செங்குத்தான பாதையில் உள்ள பகுதியாகும். இங்கு கனமழை பெய்யும் காலங்களில் வரவேகூடாது.
ஏனெனில் கனமழை பெய்யும் போது, எளிதாக மண் சரிவு ஏற்படும். அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அடுக்கம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் குருடிக்காடு பகுதியில் கடும் மண் சரிவு ஏற்பட்டது. இதில் 2-க்கும் மேற்பட்ட இடத்தில் ராட்சத பாறைகள் சாலையில் உருண்டு விழுந்தன. மேலும் மரங்கள் முறிந்து விழுந்ததில் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறையினருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் ராஜன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு நேற்று வந்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் மரங்கள் மற்றும் பாறைகளை அகற்றி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட தொடங்கினார்கள்.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில், ராட்சத பாறைகளை அகற்றுவது மிகவும் கடினமான பணியாகும். இதனால் பாறைகளை துளையிடும் எந்திரம் கொண்டு அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த பணிகள் சுமார் 3 நாட்களுக்கு நீடிக்கும் என்றும், தற்போது இருசக்கர வாகனம் செல்லும் அளவுக்கு சீரமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.
மேலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் மலைக்கிராம விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர். எனவே சாலை சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications