ஆலமரத்தை காப்பாற்ற ஆட்டோ டிரைவர் செய்த தரமான சம்பவம்.. வேரோடு தூக்கி மாற்று இடத்தில் நட்ட அதிகாரிகள்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 50 ஆண்டு கால ஆலமரம் சாலை விரிவாக்க பணிக்காக வெட்டப்பட இருந்தது. ஆட்டோ டிரைவர் இது தொடர்பாக தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் மரத்தை வேறு இடத்தில் நட்டு பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, ஒரு கிலோ மீட்டர் தொலைவில், இந்த ஆலமரம் மீண்டும் துளிர்விடும் வகையில் நட்டப்பட்டுள்ளது.
நாம் வாழும் இந்த பூமியில் போதிய அளவு மழை பெய்வதற்கு அடிப்படையானது மரங்களே ஆகும். ஆனால், தற்போதைய மக்கள் தொகை பெருக்கம், நகரமயாக்கல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களுக்காக மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுகின்றன.

வெட்டப்படும் மரங்களுக்கு மாற்றாக புதிய மரங்கள் நடப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. குறிப்பாக சாலை விரிவாக்கம் செய்யப்படும் போது சாலையோரங்களில் அதிக அளவில் மரங்கள் வெட்ட வேண்டிய நிலை உள்ளது. தவிர்க்க முடியாத நேரங்களில் மரங்களை வெட்ட நேரிடும் போது வெட்டப்படும் எண்ணிக்கையை விட கூடுதல் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என்று அரசுக்கு பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தான், கள்ளக்குறிச்சியில் சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட இருந்த ஆலமரம் ஆட்டோ ஓட்டுனர் முயற்சியால் காப்பாற்றப்பட்டுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:- கள்ளக்குறிச்சி மாவட்டம் மயிலாம்பாறையில சாலை விரிவாக்கத்திற்காக சாலையோரம் இருந்த ஆலமரம் வெட்டப்பட இருந்தது. இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் மாரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பல உயிரினங்களின் வாழ்விடமாக இருக்கும் ஆல மரத்தை வெட்டாமல் வேறு இடத்தில் நட்டு பாதுகாக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, 50 ஆண்டு கால ஆலமரத்தை பொக்லைன் இயந்திரம் உதவியுடன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வேரோடு பிடுங்கி.. ஒரு கிலோ மீட்டர் தூரம் இழுத்து சென்று வேறு இடத்தில் நட்டு வைத்தனர்.
மீண்டும் துளிர்க்கும் வகையில் தண்ணீர் ஊற்றி ஆலமரத்தை நட்டு வைத்தனர். 50 ஆண்டு கால ஆலமரம் மீண்டும் துளிர்க்கும் வகையில் வேறு இடத்தில் நட்டு வைத்து இருப்பது சமூக ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆலமரத்தை வேறு இடத்தில் நட்டுவதற்கு வழிவகை செய்த ஆட்டோ டிரைவரின் செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications