ஆளுநர் அல்ல.. அரைக்கால் டவுசர் சங்கி.. உத்தரவு குப்பைக்கு போகும்: தமிழன் பிரசன்னா ஆவேசம்! #Exclusive
சென்னை: பாஜகவின் ஏஜெண்டாக, அமித்ஷாவின் கையாளாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை படுகொலை செய்யும் நிலைக்குப் போயிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என காட்டமாக விமர்சித்துள்ளார் தமிழன் பிரசன்னா.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழ்நாடு அரசு அறிவித்த நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
ஆளுநர் ரவியின் இந்த நடவடிக்கை திமுகவினரை கொந்தளிக்கச் செய்துள்ளது. ஆளுநர் ரவிக்கு, அமைச்சரை நீக்க அதிகாரம் இல்லை, ஆளுநரின் செயல்பாட்டை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். திமுக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் பலரும் ஆளுநரின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

தமிழன் பிரசன்னா பேட்டி: திமுக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான தமிழன் பிரசன்னா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், "ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய அரசமைப்புச் சட்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் அரைவேக்காட்டுத்தனத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அண்ணல் அம்பேத்கர், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றும்போது ஆளுநர் என்பவர், அரசியலமைப்பின் பாதுகாவலர் என்று சொன்னார்.
ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தில் தனக்கு கொடுக்கப்படாத அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு அமைச்சரை நீக்குகிற விசித்திரம் எல்லாம் பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸின் ஏஜெண்டுகளாக செயல்படும் ஆளுநர்களால் மட்டும்தான் முடியும்.
சவக்குழியில் தள்ளும் வேலை: ஒரு அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா என்று பார்த்தால், ஆளுநருக்கான அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டவை. சட்டமன்ற அதிகாரம், செயல்படுத்தும் அதிகாரம், நீதி அதிகாரம், விருப்புரிமை ஆகிய 4 அதிகாரங்களில், சட்டமியற்றும் அதிகாரத்தில், அமைச்சர் முதலமைச்சரின் விருப்பப்படி நியமிக்கப்படுவார் என்றுதான் உள்ளது. ஆளுநர் என்று இல்லை.
அரசியலமைப்பு தோல்வி என்ற விஷயத்தை பயன்படுத்தி, ஒரு அமைச்சரை நீக்கும் உத்தரவை ஆளுநர் பிறப்பிப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை சவக்குழியில் தள்ளுவதற்குச் சமமான காரியம்.
காழ்ப்புணர்ச்சி: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டமன்ற பெரும்பான்மை பெற்று சட்டமன்றத்தால் அமைக்கப்பட்ட அமைச்சரவையில், அமைச்சர்களால் முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த முதலமைச்சரின் ஆலோசனைப்படியே அமைச்சர்களை சேர்க்கவோ, திரும்பப் பெறவோ, நீக்கவோ முடியும் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது.
அப்படி இருக்கும்போது, ஆளுநர் தன்னிச்சையாக பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் நாளை உச்ச நீதிமன்றத்தில் வரும் வழக்கிற்கு துணை ஆவணம் தருகிறேன் என்ற அடிப்படையில் செயல்படுகிறார். முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறார். இதை திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பூர்வமாக சந்திப்பார்.
ஜெயலலிதா இருந்தாரே: ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பிறகும் கூட அமைச்சரவையில் தொடர்ந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என ஜெயலலிதா தீர்மானிக்கப்பட்ட பிறகும் கூட அவர் சாகும்போது குற்றவாளி இல்லை எனச் சொன்னது இந்த உலகம்.
செந்தில் பாலாஜி செல்வாக்கு செலுத்தும் அளவில் தான் அமலாக்கத்துறை விசாரணை நடக்கிறதா என்பது எனது கேள்வி. அப்படி செல்வாக்கு செலுத்தி இருந்தால், இவ்வளவு கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் சூழல் செந்தில் பாலாஜிக்கு நேர்ந்திருக்காது.
மோடி, அமித்ஷா: இன்று பிரதமராக இருக்கும் மோடி, குஜராத்தில் முதல்வராக இருந்தபோது இனப் படுகொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. அந்த வழக்கில் அவர் குற்றம்சுமத்தப்பட்டது குஜராத்தின் முதல்வர். அதே நிலையில் தான் இந்தியாவின் பிரதமராகவும் பதவியேற்றார்.
சட்டத்தை தன் கையில் வைத்திருந்த நரேந்திர மோடிக்கு ஒரு சட்டம், சட்டத்தின்படி எல்லாவற்றையும் சந்திக்கும் திமுகவுக்கு ஒரு சட்டமா? உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா, நீதிபதி லோயா வழக்கு, பில்கிஸ் பானு வழக்கு, போலி என்கவுண்டர் வழக்கு ஆகியவற்றில் எல்லாம் குற்றம் சுமத்தப்பட்டபோது குஜராத்தின் உள்துறை அமைச்சர். இந்த வழக்குகள் நடக்கும்போதும் இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கிறார்.
இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் 77 மத்திய அமைச்சர்களில் 33 அமைச்சர்கள் மிகக் கொடுமையான வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர். நாராயண ரானே என்பவர் மாற்றுக் கட்சியில் இருந்து பாஜகவில் சேர்ந்ததும் உத்தமராகி விடுகிறார். அவர் மீதான அமலாக்கத்துறை விசாரணை நிறுத்தப்படுகிறது. அவர் மத்திய அமைச்சராக தொடர்கிறார். இதெல்லாம் ஆளுநருக்கு தெரியாதா? பாஜக நியமித்த ஆளுநர்கள் தொடர்ச்சியாக இதனை செய்து வருகின்றனர்.
குப்பைக் கிடங்குக்குப் போகும்: கேரள அமைச்சர் பாலகோபாலை நீக்கச் சொல்லி, ஆளுநர் ஆரிப் கான், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு உத்தரவிடுகிறார். அதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று அமைச்சரவையில் இருந்து நீக்க மறுத்தார்.
கேரளாவில் அந்த உத்தரவு எப்படி சட்டமன்றத்தின் குப்பைக் கிடங்குக்குப் போனதோ, அதேபோலத்தான் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியின் இந்த உத்தரவும் குப்பைக்குப் போகும். அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர்வார். அமைச்சராக யார் இருக்க வேண்டும், எந்த இலாகாவில் இருக்க வேண்டும் என்பதெல்லாம் முதலமைச்சரின் உரிமை.
இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருக்கும் உரிமை கொண்டவர் முதலமைச்சர். அதில் தலையிட ஆளுநருக்கு உரிமை கிடையாது. திமுக vs ஆளுநர் கிடையாது, திமுக vs ஆர்.எஸ்.எஸ்-பாஜக. ஆளுநர் ஆர்.எஸ்.எஸ்ஸின் அரைக்கால் டவுசர் சங்கியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பாஜகவின் ஏஜெண்டாக, அமித்ஷாவின் கையாளாக, சட்டத்தை முடக்கி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை படுகொலை செய்யும் நிலைக்குப் போகிறார். நாங்கள் எதையும் சட்டப்பூர்வமாக சந்திப்போம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
கோவையில் தொடங்கிய திமுக ஆட்டம்.. ஃபயர் மோடில் செந்தில் பாலாஜி.. பரபரக்கும் களம் -
வேடசந்தூர் சிட்டிங் எம்எல்ஏ காந்திராஜனுக்கு சீட் மறுப்பு! திமுகவின் சாமிநாதன் வேட்பாளரானது எப்படி? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன்












Click it and Unblock the Notifications