மாடுகளுக்கு பெரியம்மை நோய்- வாயே திறக்காததால் திமுக அரசை டிஸ்மிஸ் செய்துடுங்க..சொல்வது எச்.ராஜா
சென்னை: தமிழ்நாட்டில் மாடுகளுக்கு பெரியம்மை நோய் பரவும் நிலையில் சட்டசபையில் ஆளுநருடன் சண்டைக்கு நிற்கிறார் முதல்வர் ஸ்டாலின்; ஆகையால் திமுக அரசை நீக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டு அரசு தயாரித்த உரையை வாசிக்காமல், தன்னிச்சையாக சிலவற்றை சேர்த்து, தவிர்த்துவிட்டு ஆளுநர் ரவி வாசித்ததுதான் சர்ச்சைக்கு அடிப்படை.

ஆளுநரின் இந்த சர்ச்சையான நடவடிக்கையால் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக, அதிமுக அல்லாத அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஆளுநர் ரவியை கடுமையாக கண்டித்து வருகின்றனர். அத்துடன் தமிழ்நாட்டில் இருந்து ஆளுநர் ரவி வெளியேற வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். தமிழ்நாடு ஆளுநர் ரவியை ஜனாதிபதி உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு, புதுச்சேரியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாட்டு மாணவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கோவை, புதுச்சேரியில் ஆளுநர் ரவியின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. புதுச்சேரியில் ஆளுநர் ரவியின் உருவபொம்மையை எரித்த 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

தற்போது தமிழ்நாடு ஆளுநர் ரவியை ஆதரித்து பேசி வருகிறது பாஜக. அக்கட்சி சார்பில் புதுக்கோட்டையில் ஆளுநர் ரவியை பாராட்டி போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. கோவையில் ஆளுநர் ரவிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர் பாஜகவினர். சமூக வலைதளங்களில் பாஜகவினர் ஆளுநர் ரவியை தீவிரமாக ஆதரித்து கருத்துகளை பதிவிடுகின்றனர். ஆனால் இதற்கு எதிராக திமுக ஐடிவிங் உள்ளிட்டவை கடுமையான பதிலடி தந்து வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டசபை நிகழ்வுகள் தொடர்பாக நேற்று சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, திருமாவளவன் ஒரு தேச துரோகி,டெல்லியில் இருந்துகொண்டு தென் மாவட்டங்களை கொளுத்துவேன் என்று கூறிய சமூக விரோதி திருமாவளவன். தனித்தமிழ்நாடு என ஏற்கனவே பலமுறை பேசியுள்ளார், தற்போது ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும் என அறிவித்துள்ளார். அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கைது செய்ய வேண்டும். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர், கருணாநிதியை விட ஆபத்தானவர் ஸ்டாலின் என சொல்லி இருந்தேன். அதனைத்தான் இப்போது ஸ்டாலின் நிரூபித்து கொண்டிருக்கிறார் என்றார்.

இதனைத் தொடர்ந்து இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் எச்.ராஜா பதிவிட்டுள்ளதாவது: தமிழகம் முழுவதும் கடந்த 3 மாதங்களாக மாடுகள் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால் இது பற்றி வாய்திறக்காத முதல்வர் சட்டமன்றத்தில் ஆளுநருடன் சண்டைக்கு நிற்கிறார். இந்த மக்கள் விரோத அரசை நீக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இவ்வாறு எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications