அடடே சூப்பர்! காலநிலை பூங்கா, தொல்பொருள் விளக்க மையம்.. இன்று அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: மாநிலத்தில் பல இடங்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புதிய தீயணைப்பு நிலையங்கள் உள்ளிட்டவற்றை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.. மேலும் சில புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்
தமிழ்நாட்டில் இப்போது சட்டசபை கூட்டத் தொடர் நடந்து வருகிறது. கடந்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதைத்தொடர்ந்து மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
தமிழக அரசு சார்பில் பல்வேறு மசோதாக்கள் இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில், இன்று சட்டசபையில் ஆளுநர் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வர உள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்கச் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் புதிய தீயணைப்பு நிலையங்கள், வீட்டுவசதி வாரிய கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சி சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று காலை காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்பு மீட்புப் பணி நிலையங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், சென்னை பெருநகர காவல் துறையினரின் பயன்பாட்டிற்காக மீட்பு இழுவை வாகனங்கள் மற்றும் கடற்கரை ரோந்து வாகனங்களின் சேவைகளையும் முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், நகர் ஊரமைப்பு இயக்கத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.
இது மட்டுமின்றி சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் அமைக்கப்படவுள்ள தொல்பொருள் விளக்க மையம் மற்றும் காலநிலை பூங்கா, இரும்பு மற்றும் எஃகு வணிக அங்காடியில் அமைக்கப்படவுள்ள திண்கரை சாலைப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.












Click it and Unblock the Notifications