ஊட்டிக்கு வராத விடியல்.. இப்படி ஒரு ஞாயிறு நீலகிரிக்கு இனி வரவேக்கூடாது.. டோட்டலாக காலி
ஊட்டி: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அடியோடு குறைந்து, வெறிச்சோடி போய் உள்ளது. வயநாட்டை போல் நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் என சமூக வலைத்தளத்தில் வதந்தி பரவியதால் பலரும் தங்களது முன்பதிவுகளை ரத்து செய்துவிட்டார்கள். ஏற்கனவே கோடை சீசனின் போதும், இபாஸ் அறிமுகத்தால் ஊட்டி கடுமையாக பாதிக்கப்பட்டது
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டும் என்று கூறுவார்கள். அந்த கதையாக வயநாடுக்கு ஏற்பட்ட பாதிப்பு நீலகிரிக்கு வரும் என்று பரவிய வதந்தியால் நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஞாயிறு வழக்கமானதாக இல்லை.. அதுமட்டுமின்றி அண்மைக் காலமாக ஊட்டி சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்திற்கு வார விடுமுறை, பண்டிகை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை மிக அதிகமாக இருக்கும். மார்ச் முதல் மே மாதம் வரை முதல் சீசன் என்றால், ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை ஊட்டிக்கு இரண்டாவது சீசன் ஆகும்.
ஏனெனில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பொதுவாக கனமழை பெய்யும். ஆகஸ்ட் மாதத்தில் மழை குறைந்து விடும். செப்டம்பரில் எல்லாம் 2வது சீசன் பீக் ஆகிவிடும். இரண்டாவது சீசன் தொடங்கி விட்டால் தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா உள்பட வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படும்.
இந்நிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30-ந் தேதி ஏற்பட்ட வரலாறு காணாத மழை மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் கேரள மாநில மக்களை மட்டுமின்றி, சுற்றுலாவிற்காக வயநாடு , ஊட்டிக்கு அடிக்கடி வந்து செல்லும் பலரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. வயநாடு மேற்கே உள்ளது என்றால், நீலகிரி கிழக்கே உள்ள பகுதியாகும்.
வயநாடு போல், நீலகிரி மாவட்டமும் சுற்றுலா பயணிகளை நம்பியே உள்ள மாவட்டம் ஆகும். வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு பின்னர் நீலகிரி மாவட்டத்தில் கேரள மாநில சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து உள்ளது. வழக்கமாக வார விடுமுறை நாட்களில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம் போன்ற சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருக்கும்.
ஆனால், நிலச்சரிவுக்கு பின்னர் சுற்றுலா பயணிகள் வருகை நீலகிரி மாவட்டத்திற்குவெகுவாக குறைந்து விட்டது. இதனால் ஊட்டியைச் சுற்றியுள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம், பைகா அணை உள்பட சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆகும்.
வழக்கமாக சனி ஞாயிறுகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அறைகள் முன்பதிவு அதிகமாக இருக்கும்,. ஆனால் நேற்று சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. போன வாரம் ஞாயிறு அன்றும் இப்படித்தான் இருந்ததாக நீலகிரி மாவட்ட மக்கள் கூறுகிறார்கள்.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு எதிரொலியாக, நீலகிரியில் ஒரு வதந்தி அண்மையில் பரவியது. வயநாட்டை போல் நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் என சமூக வலைத்தளத்தில் வதந்தி பரவியது. இதன் காரணமாக பலரும் சுற்றுலா வரவில்லை.. இதனால் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவை நம்பியுள்ள தங்கும் விடுதி நடத்துபவர்கள், வியாபாரிகள், பூங்காக்களில் புகைப்படம் எடுக்கும் புகைப்பட கலைஞர்கள் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுபோதாது என்று வயநாடு நிலச்சரிவு பாதிப்பு காரணமாக சுதந்திர தின விடுமுறை மற்றும் வார விடுமுறைக்காக தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்த கேரள மாநில சுற்றுலா பயணிகள் முன்பதிவை ரத்து செய்துவிட்டார்களாம். கோடை சீசனின் போது இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்ததால் நீலகிரி மக்கள் பாதிக்கப்பட்டார்கள் . இப்போது வயநாடு நிலச்சரிவால் 2-வது சீசனிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால், மாற்றுத் தொழில்களை தேடி செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக் சுற்றுலா விடுதி நடத்துவோர் கவலை அடைந்துள்ளனர். தயவு செய்து நீலகிரி குறித்து பீதியை கிளப்பாதீர்கள். வதந்திகள் தான் உலகிலேயே மோசமான ஆயுதம் என்றால், அதுமிகையல்ல.. அதுதான் நீலகிரியை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications