ஊட்டி, கொடைக்கானலே தோற்றுப்போகும்.. தேனியில் தென்னிந்தியாவிலேயே குளிரான இடம்
தேனி: ஊட்டி மற்றும் கொடைக்கானலை விடவும் குளிரான இடம் தென்னிந்தியாவில் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா.. இருக்கிறது.. அதுவும் தமிழ்நாட்டில் தேனியில் இருக்கிறது. ஆனால் அதற்கு போகும் வழி தமிழ்நாட்டில் இல்லை.. ஊட்டி மற்றும் கொடைக்கானலைவிட தற்போதைய நிலையில் கொழுக்குமலையில் தான் குளிர் அதிகமாக இருக்கிறது. கொழுக்குமலையும், கொடைக்கானலும் கிட்டத்தட்ட ஒரே மலையில் தான் அமைந்துள்ளன. இதனால் கொடைக்கானலை போல் தான் வெப்ப நிலை குறைவாகவே இருக்கும். ஆனால் தற்போதைய காலநிலை மாற்றத்தால், கொடைக்கானல் ஊட்டியைவிட கொழுக்குமலையில் குளிர் இருக்கிறது.
பொதுவாக நாம் எல்லாரும் நினைப்பது நீலகிரி மாவட்டம் ஊட்டி தான் தமிழ்நாட்டின் மிக குளிரான இடம் என்று.. அதற்கு அடுத்தபடியாக கொடைக்கானலில் குளிர் அதிகமாக இருக்கும் என்று நினைப்போம்.. இந்த இரண்டுமே சர்வதேச அளவில் புகழ் பெற்ற கோடைவாசல் தலங்களாக இருப்பதால் அங்கு தான் மக்கள் அதிகமாக செல்கிறார்கள். இங்கு சுற்றுலா செல்ல பல இடங்கள் உள்ளன. ஊட்டி சென்றால் இப்போது உள்ள கிளைமேட்டிற்கு திரும்ப மலையை விட்டு இறங்கவே தோன்றாது. அந்த அளவிற்கு சூப்பராக இருக்கிறது. அதேநேரம் வெயில் அங்குமே சற்று இருக்கிறது.

அடுத்ததாக கொடைக்கானலை பற்றி பேசினால், இங்கு தற்போது குளிர் இரவில் அதிகமாகவும், பகலில் சற்று வெயிலும் இருக்கிறது. எனினும் காடுகள் காரணமாக வெயிலின் தாக்கம் சுத்தமாக இருக்காது. ஊட்டி, கொடைக்கானல் இரண்டுமே மக்கள் அதிகம் விரும்பும் இடங்களாக உள்ளன. இங்கு தான் பலரும் படை எடுக்கிறார்கள். அதேநேரம் கொடைக்கானல் செல்பவர்கள் சற்று ஒரு மூன்று மணி நேரம் அப்படியே பயணத்தோடு சேர்த்து சென்றால், கொழுக்குமலை போகலாம். தேனி மாவட்டத்தில் உள்ள இந்த இடம் தொன் தென்னிந்தியாவின் குளிரான இடம் ஆகும்.
கொடைக்கானல் சென்றால், தேனி மாவட்டத்தில் உள்ள அருவிகளான கும்பக்கரை, வீரபாண்டி, சுருளி, சோத்துப்பாறை, சின்ன சுருளி, தொட்டிப்பாலம், மேகமலை, தேக்கடி போன்ற பகுதிகளை ரவுண்டு அடிக்கலாம். எல்லா ஆறு மற்றும் அருவிகளில் தேனி மாவட்டத்தில தண்ணீர் நன்றாக வருகிறது. இறுதியாக குரங்கணி அருவியில் குளித்துவிட்டு, அப்படியே போடி முந்தலில் ஒரு மணி நேரம் மலையேறினாலே காரில் சூரிய நெல்லி போய்விடலாம். மொத்தமே 30 கி.மீ தூரம் இருக்கும். சூரியநெல்லியில் இருந்து கொழுக்குமலை உச்சிக்குச் செல்ல சுமார் 1 மணி நேரம் முதல் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் வரை ஆகும். இது வெறும் 10 முதல் 12 கிலோமீட்டர் தூரம் தான். ஆனால் சாலை மிகவும் கரடுமுரடாக இருப்பதால் பயண நேரம் அதிகமாகும்.
அதேநேரம் உங்கள் சொந்தக் காரில் செல்ல முடியாது. சூரியநெல்லியில் இருந்து 4x4 ஜீப் மூலமாக மட்டுமே செல்ல முடியும். இந்த ஒரு மணி நேரப் பயணம் மிகவும் குலுங்கலாக இருக்கும், ஆனால் சுற்றிலும் உள்ள தேயிலைத் தோட்டங்களின் அழகு உங்களின் வலியை மறக்கச் செய்துவிடும்.
பொதுவாகவே கொழுக்குமலை வெயில் சற்று குறைவாகவே உள்ள இயற்கை விரும்பிகளின் சொர்க்க பூமியாக இருக்கிறது. இதுதான் சர்வதேச சுற்றுலா தலமான மூணாறின் தனித்துவமான இடம் ஆகும் (தேனி மாவட்டம் என்றாலும் சாலை வசதி தமிழ்நாடு வழியாக இல்லை) . தனிமையில் இயற்கையையும் காடுகளையும் ரசிக்க விரும்புவோருக்கு அற்புதமான இடம் என்றால் அது கொழுக்குமலை தான். கொழுக்குமலையில் ஊட்டி மற்றும் கொடைக்கானலை விட வெப்பநிலை குறைவாக இப்போது இருக்கிறது.
கொழுக்குமலையில் சூரிய உதயத்தைப் பார்க்கத் திட்டமிட்டிருந்தால், அதிகாலை 4 அல்லது 5:00 மணிக்கே சூரியநெல்லியில் இருந்து ஜீப்பில் கிளம்புவது நல்லது. அப்போதுதான் சரியாக 6:00 மணி வாக்கில் உச்சியை அடைய முடியும். அதற்கு முன்பாகவே போய் சூரியனை பார்ப்பது கிட்டத்தட்ட இயற்கை அன்னையின் தரிசனத்தை நேரில் பார்ப்பது போன்ற ரம்மியமான உணர்வு தரும்.. மூணாறு சுற்றுலா செல்பவர்கள் தவறவே விடக்கூடாத இடம் என்றால் அது கொழுக்குமலை தான்.












Click it and Unblock the Notifications