கொடைக்கானல் அருகே வாழ்நாளில் ஒரு முறையாவது போக வேண்டிய இடம்.. வனத்துறை குட்நியூஸ்
கொடைக்கானல்: சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலில் பலருக்கும் பிடித்த சுற்றுலா தலம் என்றால் அது நிச்சயம் பேரிஜம் ஏரி தான். மதிகெட்டான் சோலை பகுதியில் அமைந்துள்ள இந்த இடம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இந்நிலையில் யானைகள் நடமாட்டத்தால் தடை செய்யப்பட்டிருந்த கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை இன்று முதல் அனுமதி வழங்கியது.
உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானல் நகரின் மையப்பகுதியில் இருந்து 22 கிமீ தொலைவில் அமைந்துள்ள இயற்கையான நன்னீர் ஏரி தான் பேரிஜம் ஏரி. உலகின் மிக அழகிய காடுகளில் ஒன்றான இந்த பகுதியில் தான் மதிகெட்டான் சோலை அமைந்துள்ளது. இந்த பேரிஜம் ஏரிக்கு செல்ல, வன அனுமதிச் சீட்டு அவசியம் ஆகும். கொடைக்கானலில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் எளிதாகப் பெற்றுக் கொள்ளமுடியும். முற்றிலும் அடர்ந்த காடுகளுக்கு நடுவில் அமைந்துள்ள இந்த அற்புதமான ஏரிக்கு விடுமுறையைக் கழிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் செல்வது உண்டு. பல சினிமா திரைப்படங்கள் இந்த பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது.

பேரிஜம் ஏரியில் இருந்து மதிகெட்டான் சோலை காடுகளையும், பல்வேறு சிறு உயிரினங்களையும் சர்வ சாதாரணமாக காண முடியும். மிக அமைதியான இந்த காட்டில் மீன்பிடிப்பது, பறவைகளைப் பார்ப்பது, ஏரியைச் சுற்றி உலா வருவது அற்புதமான அனுபவமாக இருக்கும். இங்கு படகு சவாரி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ஏரி தண்ணீர் தான் பெரியகுளத்திற்கு முதன்மை நீர் ஆதாரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏரியில் இருந்து செல்லும் கால்வாய் நேரடியாக பெரியகுளம் சோத்துப்பாறை அணைக்கு செல்கிறது. பேரிஜம் ஏரியை சுற்றிலும் காட்டெருமை, மான், பாம்புகள், யானைகள் மற்றும் குரங்குகளை காண முடியும் காணலாம். அதேபோல் புலிகளும் உள்ளன. அதிர்ஷ்டம் இருந்தால் இவற்றை பார்க்க முடியும்.
இதேபோல் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து பேரிஜம் ஏரிக்கு செல்லும் வழியில் தான் தொப்பி தூக்கும் பாறை, மதிகெட்டான் சோலை, அமைதி பள்ளத்தாக்கு ஆகிய சுற்றுலா இடங்களும் உள்ளன. இந்த இடங்கள் எல்லாம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடமாகும். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக, பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.வனத்துறையினரின் இந்த தடையால் பேரிஜம் ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தார்கள்
இந்நிலையில் யானைகள் பேரிஜம் ஏரிப் பகுதியை விட்டு இடம் பெயர்ந்து வேறு பகுதிக்கு சென்றன. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று (புதன்கிழமை) காலை முதல் வனத்துறை அனுமதி அளித்திருக்கிறார்கள். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பேரிஜம் ஏரிக்கு சென்று வருகிறார்கள். கொடைக்கானல் சென்று வந்துள்ளீர்கள் என்றால், ஒருமுறையாவது பேரிஜம் ஏரிக்கு போய் வாருங்கள். அப்போது தான் அந்த இடம் எந்த அளவிற்கு அற்புதமான இடம் என்பதை உணர முடியும்.












Click it and Unblock the Notifications