"ஆணுறுப்பு சிலைகள்.." குடும்பம் குடும்பமாக சுற்றி பார்க்கும் சுற்றுலா பயணிகள்! வினோதத்தின் உச்சம்
சியோல்: நீங்கள் உலகின் எந்தவொரு பகுதிக்கும் கூட சுற்றுலா சென்று இருக்கலாம்.. ஆனால், இதுபோன்ற ஒரு வினோதமான இடத்தை உங்களால் பார்த்து இருக்கவே முடியாது. அனைவரும் பார்த்தாலே முகம் சுளிக்கும் ஆணுறுப்பு சிலைகளைக் கொண்டே இங்கு ஒரு பூங்காவை அமைத்துள்ளனர். இந்த ஆணுறுப்பு பூங்காவுக்குச் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இப்போது உலகளவில் சுற்றுலா செல்லும் போக்கு கணிசமாக அதிகரித்துள்ளது. பலரும் வினோதமான ரொம்பவே தனித்துவமான இடங்களுக்குச் சுற்றுலா செல்லவே விரும்புகிறார்கள்.

அப்படி தான் இங்கே சுற்றுலாப் பயணிகளைக் கவர தென்கொரியாவில் ரொம்பவே வினோதமான ஒரு பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் என்ன இருக்கிறது என்பது தெரிந்தால் உங்கள் தலையே சுற்றிவிடும்.
தென்கொரியா ஆணுறுப்பு பூங்கா:
அதாவது தென் கொரியாவின் சின்னம் நகரில் அமைந்துள்ள இந்த ஹேசிண்டாங் பூங்காவை ஆணுறுப்பு பூங்கா என்றும் கூட அழைப்பார்கள். அதென்ன ஆணுறுப்பு பூங்கா என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். அதாவது இந்த பூங்கா முழுக்க ஆணுறுப்பு சிலைகளால் நிரம்பி உள்ளதாலேயே இதை இப்படி அழைக்கிறார்கள். இதை இங்கு குடும்பம் குடும்பமாக வந்து சுற்றிப் பார்ப்பார்களாம்.
ஏன் இப்படி வினோதமான பூங்காவை அமைத்துள்ளனர் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். இதற்கு இரண்டு வகையான கதைகளைக் குறிப்பிடுகிறார்கள். அதாவது பல ஆண்டுகளுக்கு முன்பு கன்னிப் பெண் ஒருவர் கடற்பாசி அறுவடை செய்யப் புதிதாகத் திருமணமான தனது கணவரின் படகில் சென்றிருக்கிறார். கொஞ்ச நேரத்தில் வந்து அழைத்துக் கொள்வதாக அந்த பெண்ணின் கணவர் உறுதியளித்துள்ளார். இருப்பினும், அந்த பெண்ணை கணவரால் காப்பாற்ற முடியவில்லை. அவள் கடலில் மூழ்கி உயிரிழந்துவிட்டாராம்.
என்ன காரணம்:
ஆனால், அதன் பிறகு தான் வினோதமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது அந்த கிராமத்தில் இருந்து சென்ற யாருடைய வலைகளிலும் அதன் பிறகு மீன்கள் சிக்கவே இல்லையாம். கன்னிப்பெண்ணின் உயிரிழப்பே இதற்குக் காரணம் என அவர்கள் நம்பியுள்ளனர். இதன் பிறகு தான் இரண்டு வகை கதை சொல்கிறார்கள். ஒன்று அந்த கன்னிப் பெண்ணைச் சமாதானப்படுத்த இதுபோன்ற ஆணுறுப்பு சிலைகளை வைத்ததாகச் சொல்கிறார்கள். மற்றொரு கதை சொல்ல முடியாத அளவுக்கு ஆபாசம் நிறைந்தவையாக இருக்கிறது.
இந்த பரிகாரத்தைச் செய்த பிறகே மீண்டும் மீன்களைப் பிடிக்க முடிந்ததாக அந்த கிராம மக்கள் குறிப்பிடுகிறார்கள். அதன் பிறகு எப்போதெல்லாம் மீன்கள் குறைவாகப் பிடிக்கப்படுகிறதோ.. அப்போதெல்லாம் ஆணுறுப்பு சிலைகளை வைப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். நாளடைவில் இதுவே ஆணுறுப்பு பூங்காவாக மாறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஆணுறுப்பு சிலைகள்:
இப்போது அந்த பூங்கா முழுக்க 50க்கும் மேற்பட்ட ஆணுறுப்பு சிலைகள் இருக்கிறதாம். இந்த பூங்காவைப் பார்க்க மட்டும் ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் இருந்து பொதுமக்கள் இங்கே வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்தினருடன் வந்து இங்கே போட்டோ எடுத்துச் செல்கிறார்களாம்.
இந்த பூங்காவில் நீங்கள் நுழைந்தால் வெளியே வரும் வரை.. திரும்பிய பக்கம் எல்லாம் ஆணுறுப்புகளை மட்டுமே பார்க்க முடியும். ஆனால், இங்கு வரும் மக்கள் யாரும் இதைப் பார்த்து முகம் சுளிப்பது இல்லை என்றும் கூறப்படுகிறது. இதை வேடிக்கையாகக் கடந்து சென்றுவிடுகிறார்களாம். கடந்த 2018ம் ஆண்டு தென் கொரியாவில் தான் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்த நிலையில், அப்போது தான் இந்த பூங்கா உலகளவில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications