விஜய்யின் லியோ சூட்டிங் ஸ்பாட்.. திருப்பதி அருகே வாவ்! புஷ்பா சூட்டிங்கும் இங்கதானா? தலகோனா போலாமே
சென்னை: புஷ்பா படம் பார்த்த பலரும் அதில் வரும் பச்சை பசேலென்ற இடங்கள் மனதை ஆக்கிரமித்து இருக்கும். அதே இடத்தில் விஜய்யின் லியோ படம் ஷூட்டிங்கும் நடக்கிறது. அது என்ன இடம்? எப்படி செல்வது? விரிவாக பார்ப்போம்.
அல்லு அர்ஜுன் நடித்து பெரும் வெற்றிபெற்ற புஷ்பா முதல் பாகத்தில் வரும் இடங்கள் கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் வகையில் பச்சை பசேலென்று இருக்கும். செம்மரக் காடுகளும், வாய் பிளக்க வைக்கும் வைக்கும் அருவிகளும், அழகிய காட்டாறுகளும் நம்மை பிரம்மிக்க வைக்கும். ஆக்ஷன் காட்சிகளுக்கு மத்தியில் மக்களை அமைதிப்படுத்துவதே அந்த இயற்கை காட்சிகள்.

அதே இடத்தில்தான் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படப்பிடிப்பும் நடக்கிறது. முன்பு காஷ்மீருக்கு சென்று சூட்டிங் செய்த லியோ படக்குழு தற்போது புஷ்பா சூட்டிங் நடந்த இடத்தில் முகாமிட்டு இருக்கிறது. இப்படி முன்னணி நாயகர்களும், இயக்குநர்களும் வளைத்து வளைத்து சூட்டிங் நடத்தும் இடம் எது? அதில் அப்படி என்னதான் ஸ்பெஷல்? என்ற கேள்விகள் எழலாம்.
அதுதான் திருப்பதி அருகே உள்ள தலகோனா. சென்னையில் இருந்து ஒருநாள் அல்லது 2 நாள் சுற்றுலா செல்ல விரும்புவோருக்கு சரியான இடம் இந்த தலகோனாதான். அந்த அளவுக்கு இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளும், பிரம்மிக்க வைக்கும் கிழக்கு தொடர்ச்சி மலைகளும், செம்மரங்களும், அருவிகள், நீரோடைகளும், நீர் வீழ்ச்சிகள், வித்தியாசமான பறவைகளும் உங்கள் மனதை கொள்ளையடிக்கும்.

ஆந்திராவின் சேஷாசல காட்டில் இருக்கும் தலகோனா அருவி தற்போது தலைசிறந்த சுற்றுலா தளமாக மாறி இருக்கிறது. சென்னையிலிருந்து செங்குன்றம் தாண்டி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, நாகலாபுரத்தை கடந்து ஆந்திர மாநிலத்தின் சித்தூரை நீங்கள் அடையலாம். அங்கிருந்து திருப்பதி வழியாக வண்டியை விட வேண்டும்.
அந்த வழியிலேயே கைலாசகோனா அருவி வரும். இது குறித்து நான் ஏற்கனவே பதிவிட்டு உள்ளோம். அதை கிளிக் செய்து சிறப்புகளை வாசித்துப் பாருங்கள்.
சரி விசயத்துக்கு வருவோம். கைலாசாகோனாவில் நேரம் இருந்தால் என்ஜாய் செய்துவிட்டு வண்டியை தலக்கோனா நோக்கி விடுங்கள். திருப்பதியை நீங்கள் அடைவீர்கள். தலகோனாவில் மாலை 5 மணிக்கு மேல் அனுமதி கிடையாது. எனவே சென்னையில் இருந்து காலை கிளம்பினீர்கள் என்றால் திருப்பதியிலேயே தங்கிவிட்டு காலை தலகோனா நோக்கி புறப்படுங்கள்.

திருப்பதியில் இருந்து சென்னை - அனந்தாபுரி நெடுஞ்சாலையில், பக்காரபேட்டை - தலகோனா சாலையில் சென்றால் தலகோனா வந்துவிடும். திருப்பதியில் இருந்து தலகோனாவுக்கான பயண தூரம் சுமார் 60 கிமீ ஆகும். காட்டுப்பாதையும், ஊர் பாதையும் மாறி மாறி உங்கள் பயணமே அலாதியானதாக இருக்கும்.

தலகோனா சாலை கரடுமுரடாகவே இருக்கும். கவனமாக செல்ல வேண்டும். வாகனங்களை நிறுத்திவிட்டு படிக்கட்டுகளில் 240 மீட்டர் தூரம், 40 அடி உயரம் நடந்து செல்ல வேண்டும். தலகோனா அருவி மூன்றாக பிரிக்கப்பட்டு கீழே குழந்தைகளுக்காக நீச்சல் செய்யும் இடம் உள்ளது. அதற்கு மேல் சிறிய அருவில், அதற்கு மேல் 50 அடி உயரத்தை கொண்ட பெரிய அருவியும் உள்ளது. மூலிகைகள் கலந்த தலகோனா அருவி நீர் உடலுக்கு நன்மை தரும் என்கிறார்கள்.

அருவியில் குளிப்பது மட்டுமின்றி இங்கு டிரெக்கிங்கும் செய்யலாம். ஆனால், லோக்கல் கெய்டு இருந்தால் பாதுகாப்பாக இருக்கும். 270 அடி உயரம் வரை உங்களால் டிரெக்கிங் செய்ய முடியும். அது அலாதியான அனுபவமாக இருக்கும். செம்மரங்களும், சந்தன மரங்களும் நிறைந்த காஸ்ட்லியான இந்த வனப்பகுதியில் புலிகள், யானைகள், தேவாங்குகள், வெள்ளை கழுகு, பச்சை புறா போன்ற விலங்குகளும் பறவைகளும் உள்ளதாக கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications