உத்தரகாண்டுக்கு போறீங்களா... கையில் ஒரு பையை கட்டாயம் எடுத்துட்டுப் போங்க... ஏன் தெரியுமா?
ராஞ்சி: உத்தரகாண்ட் மாநிலத்தின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக மாநிலத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களிலும் குப்பைத் தொட்டி அல்லது குப்பை பையை வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்துக்கு சுற்றுலாப் பயணிகளின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் அதே நேரத்தில், குப்பை கொட்டும் பிரச்னையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதைத்தொடர்ந்து, உத்தரகாண்ட் மாநிலத்தின் அனைத்து நுழைவாயில் பகுதியிலும் போக்குவரத்துத் துறை சார்பில் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அண்டை மாநிலங்களான உத்தரபிரதேசம், டெல்லி, ஹரியாணா, ஹிமாச்சலபிரதேசம், பஞ்சாப், சண்டிகர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த விதிமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என போக்குவரத்து துறை ஆணையர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தும் வழிகளான சர்தாம் ரூட், முசோரி, டேராடூன், நனிட்டல் உள்ளிட்ட பகுதிகளில் குப்பை கொட்டும் பிரச்னை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து, சமூக ஆர்வலர்கள், சில தொண்டு நிறுவனத்தினர் இப்பிரச்னைக்குத் தீர்வு காண பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், பல்வேறு பகுதிகளில் குப்பை குவியல் குவியலாக உள்ளதால் இப்பிரச்னை தொடர்ந்து வருகிறது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் ராதா ரதூரி, சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், வாகன ஓட்டுநர்கள், டூர் ஆபரேட்டர்கள் உள்ளிட்டோர் சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் அனைத்து நுழைவாயில் பகுதிகள் மற்றும் ஆன்லைன் மூலமாக ட்ரிப் கார்ட்ஸ் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து வாகன ஓட்டுநர்களும் முறையான ஆர்சி, இன்ஸுரன்ஸ், பிட்னஸ் சர்டிபிகெட், பொல்யூஷன் சர்டிபிகெட், பர்மிட் போன்றவற்றை அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும்.
இந்த நடவடிக்கை மூலமாக சுற்றுலாப் பயணிகள் சாலையோரத்திலேயே குப்பைகள் கொட்டப்படுவது தவிர்க்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications