நீலகிரியின் அடையாளம்.. ஊட்டி அருகே அபூர்வமான நீலக்குறிஞ்சி மலர்.. அந்த பக்கம் மட்டும் போயிடாதீங்க
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே பிக்கப் பத்தி மந்து மலை பகுதியில் 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர் பூத்துள்ளது. இந்த மலை பகுதிக்கு வெளி ஆட்கள் யாரும் செல்லக் கூடாது என்று வனத்துறை தடை விதித்துள்ளது. குறிஞ்சி மலர்கள் பூத்துள்ள பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதே இந்த தடைக்கு மிக முக்கிய காரணம் ஆகும். அதனை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
குறிஞ்சிச் செடி(strobilanthus kunthiana) அல்லது நீலக்குறிஞ்சி என்று அழைக்கப்படும் செடி இந்தியாவின் மேற்கு மலைத்தொடர்ச்சியில் பரவலாக காணப்படுகிறது. இதில் பூத்துக் குலுங்கும் நீல மலர்களினால் மொத்த மலையும் நீல நிறத்தில் தோன்றுவதால், நீலகிரி மலை என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த குறிஞ்சி மலர் செடிகளின் தாவரவியல் பெயர் என்பது ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா ஆகும். இது ஒரு புதர்வகை செடி என்று தான் தாவிரவியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இந்த குறிஞ்சி செடிகளில் ஏறக்குறைய 200 வகைச் செடிகள் உள்ளன. இவற்றில் 150 வகைகள் இந்தியாவில் மட்டுமே உள்ளன. அதில் குறிப்பாக, முப்பதுக்கும் மேற்பட்ட வகைகள் மேற்கு தொடர்ச்சி மலைகள், நீலகிரி, மற்றும் கொடைக்கானல் மலைகளில் மட்டுமே இருக்கின்றன. பண்டைய தமிழர்கள் நிலவகைகளை குறிப்பிட்ட மலையும் மலை சார்ந்த நிலத்தை "குறிஞ்சி" என்று குறிப்பிடக் காரணம் இந்த குறிஞ்சி மலர்கள் தான் என்கிறார்கள்.
இந்த குறிஞ்சி மலர்கள் என்பது எல்லாமே 12 வருடத்திற்கு ஒருமுறை தான் பூக்கும் என்று இல்லை. இதில் பல வகைகள் அடிக்கடி பூக்கக்கூடியவை. ஆனால் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் மிகவும் அபூர்வ வகையைச் சேர்ந்தவை ஆகும். இதன் தேன் மிகவும் சுவையாக இருக்கும். இது பூமியில் உருவாகி பூ வைக்க 12 வருடங்கள் எடுத்துக் கொள்ளும். இந்த செடி தற்போது ஊட்டி அருகே பூத்துள்ளது.
நீலகிரி மாவட்டம் எப்பநாடு அருகே பிக்கப் பத்தி மந்து மலை பகுதியில் 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்திருக்கின்றன. இதனை காண ஆர்வத்துடன் பலர் செல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ள பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகும். மேலும் புலி, யானை உள்ளிட்ட விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். இதனால் நீலகிரியில் பூத்துள்ள குறிஞ்சி மலர்களை காண சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடைவித்துள்ளது. தடையை மீறி சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
இதனிடையே நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கன்னேரி முக்கு பள்ளத்தாக்கில், 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் நீலக் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதை பார்ப்பதற்கு நீலகிரி வரும் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். உள்ளூர் மக்களுமே இதனை பார்க்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications