ஊட்டிக்கு சுற்றுலா வந்த சிறுவனுக்கு இப்படியா ஆகனும்.. பெற்றோர் கண் முன்னே.. யாருக்குமே ஆகக்கூடாது
ஊட்டி: தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கி உள்ளதால், சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி செல்லும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்குகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. நீலகிரியில் காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள் அறுந்து விழுந்தன. இதனால் சுற்றுலா தலங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் அறைகளுக்குள் முடங்கி உள்ளனர். ஊட்டிக்கு சுற்றுலா வந்த சிறுவனுக்கு நடந்த சம்பவம் அனைவரையும் ஆடிப்போக வைத்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தொடங்கிவிட்டது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கினால், கேரள எல்லையில் உள்ள, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும். அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் நேற்றும், இன்றும் (திங்கட்கிழமை) அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுத்திருந்தது.

இதன்படியே நீலகிரியில் நேற்று முன்தினம் முதல் பல இடங்களில் கனமழை பெய்தது. நேற்று 2-வது நாளாக ஊட்டி உள்பட பல இடங்களிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கூடலூர், பந்தலூர் மற்றும் அவலாஞ்சியில் கனமழை அருவி போல் கொட்டியது. ஊட்டியில் நாள் முழுக்க மழை பெய்த காரணத்தால் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த சூழலில் சுற்றுலா பயணிகள் ஞாயிற்றுக்கிழமையான நேற்று வழக்கம் போல் அதிகமாக வந்திருந்தனர். இந்த கனமழையால் பலர் அறைகளுக்குள் முடங்கிய நிலையில், சிலர் சுற்றி பார்த்தனர். அந்த வகையில் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் காரில் ஊட்டிக்கு சுற்றுலாவுக்கு வந்திருந்தனர். அவர்கள் கனமழைக்கு நடுவில், ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை பைன்பாரஸ்ட் பகுதியில் 8-வது மைல் அருகே வந்து காரை நிறுத்தி இயற்கை காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்தார்கள். அப்போது பலத்த காற்றுக்கு மரக்கிளை முறிந்து 15 வயதாகும் சிறுவன் ஆதிதேவ் மீது விழுந்தது. இதில் அவன் படுகாயம் அடைந்தான்.
தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சிறுவனை மீட்டு ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால், செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தார். கனமழையால் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குன்னூர் கம்பி சோலை, கேத்தி, தலைக்குந்தா, தலையாட்டு மந்து, ஊட்டி படகு இல்லம் பகுதியில் மரங்கள் விழுந்தன. இதேபோல் பல பகுதிகளில் மின்கம்பங்கள் மீது மரங்கள் விழுவதால் அடிக்கடி மின் தடை ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
நேற்று கனழை காரணமாக மாலை 4 மணி அளவில் உடனடியாக அறைகளுக்கு திரும்புமாறு சுற்றுலா பயணிகளுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது. இதனிடையே இன்றும் கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா காட்சி முனை, பைன்பாரஸ்ட், அவலாஞ்சி, பைக்காரா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.
ஊட்டிக்கு இப்போதைக்கு சுற்றுலா செல்வது நல்லது அல்ல.. நிலைமை சரியான பின்னர் சுற்றுலா செல்வதே சிறந்தது ஆகும். உள்ளூர் நிலவரம் அறிந்து செல்லுங்கள். பேரிடர் மீட்பு படை மரங்களை அகற்றுவது மற்றும் மின்கம்பங்களை சரிசெய்வது, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது போன்ற பணிகளை செய்து வருகிறார்கள். தாழ்வான இடங்களில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களுக்கு சென்றுவிடுவது நல்லது ஆகும்.












Click it and Unblock the Notifications