செங்கல்பட்டு மலையில் மாணவர்கள் ஜாலி டிரக்கிங்.. கனவிலும் நினைக்காத சம்பவம்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி பயிற்சி மையம் அமைந்துள்ள அனுமந்தபுரம் மலைப்பகுதிக்கு அனுமதியின்றி கல்லூரி மாணவர்கள் 6 பேர் டிரக்கிங் சென்றுள்ளனர். அங்கிருந்த இரும்புப் பொருளை எமன்சு யாதவ் என்ற மாணவர் காலால் உதைக்கும் போது அவர்கள் கனவிலும் நினைக்காத சம்பவம் நடந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் டிரக்கிங் செல்வோர் கவனிக்க வேண்டியவற்றை பார்ப்போம்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள அனுமந்தபுரம் பகுதி ஒரு அழகான இயற்கை எழில் கொஞ்சும் இடமாகத் தெரிந்தாலும், அது மிக அபாயகரமான ஒரு ராணுவக் கட்டுப்பாட்டு மண்டலமாக இருக்கிறது. அனுமந்தபுரம் மலைப்பகுதி இந்திய ராணுவம் மற்றும் பல்வேறு பாதுகாப்புப் படையினர் (CISF, CRPF, தமிழ்நாடு போலீஸ்) துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டுப் பயிற்சி மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் இடமாக இருக்கிறது.

இதற்காகப் பல நூறு ஏக்கர் நிலம் ராணுவத்தின் வசம் உள்ளது. இந்த இடம் மிகவும் ஆபத்தான இடம் ஆகும். ஏனெனில் வெடிக்காத குண்டுகள் அடிக்கடி கண்டெடுக்கப்படும். அனுமந்தபுரம் மலைப்பகுதியில் ராணுவ பயிற்சி முகாமில் பயிற்சியின் போது ராணுவ வீரர்கள் பயன்படுத்திய சக்தி வாய்ந்த ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் வெடிக்காத நிலையில் கிடந்ததை அப்பகுதியில் மாடு மேய்ப்பவர்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் எல்லாம் கடந்த சில ஆணடுகளுக்கு முன்பு வரை கொடுத்துள்ளனர். அதேபோல் சில நேரங்களில் வெடித்து விபத்தும் ஏற்பட்டுள்ளது.
இங்கு பயிற்சியின் போது போடப்படும் அனைத்துக் குண்டுகளும் வெடிப்பதில்லை. சில குண்டுகள் மண்ணில் புதைந்து 'செயலற்ற' நிலையில் இருக்கும். இவை பல ஆண்டுகள் ஆனாலும் வீரியம் குறையாமல் இருக்கும். யாராவது தெரியாமல் மிதிக்கும்போதோ, கல்லால் அடிக்கும்போதோ அல்லது அதிக வெப்பம் தாக்கும்போதோ அவை 'கிளைமோர்' கண்ணிவெடி போலச் சிதறி உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும்.
அனுமந்தபுரம் பகுதிக்குச் செல்ல முறையான நுழைவு வாயில்கள் இருந்தாலும், மலைப்பகுதியைச் சுற்றி நிரந்தரமான மதில் சுவர்களோ அல்லது வேலிகளோ எப்போதும் கிடையாது. இங்கு ஆடு, மாடு மேய்ப்பவர்கள் மற்றும் விறகு சேகரிப்பவர்கள் தங்களுக்குத் தெரிந்த மறைவுப் பாதைகள் வழியாக உள்ளே செல்கின்றனர்.
அதேபோல் சுற்றுலாப் பயணிகள் & மாணவர்கள், அண்மைக்காலமாக கூகுள் மேப்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு, அனுமதியின்றி டிரக்கிங் செல்வது அதிகரித்துள்ளது. இவர்கள் பெரும்பாலும் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்ற எச்சரிக்கையைப் பொருட்படுத்துவது கிடையாது. சாகத்திற்காக செல்கிறார்கள்.
இப்பகுதியில் மற்றொரு பெரிய ஆபத்து என்னவென்றால், வெடித்த குண்டுகளின் இரும்புத் துகள்களைச் சேகரித்து பழைய இரும்புக்கடையில் விற்க ஒரு கும்பல் ரகசியமாகச் செயல்படுகிறது. இவர்களைப் பின்தொடர்ந்து சில நேரங்களில் மாணவர்களும் ஆர்வம் காரணமாக உள்ளே நுழைந்து விடுவதும் நடக்கிறது. அனுமந்தபுரம் ராணுவப் பகுதிக்குள் அனுமதியின்றி நுழைவது பாதுகாப்பு விதிமுறைகளின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். விபத்து நடந்தால் ராணுவத்திடம் இருந்து எந்த இழப்பீடும் கோர முடியாது என்பதுடன், உயிர் பிழைப்பவர்கள் மீது அத்துமீறி நுழைந்ததற்காக வழக்குப் பாயும் அபாயமும் உள்ளது. ஆனால் சிலர் அரைகுறையான ரீல்ஸ்களை பார்த்துவிட்டு செல்கிறார்கள்.
அப்படித்தான் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி பயிற்சி மையம் அமைந்துள்ள அனுமந்தபுரம் மலைப்பகுதிக்கு அனுமதியின்றி காட்டாங்குளத்தூரில் உள்ள பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் 6 பேர் டிரக்கிங் சென்றுள்ளனர். இதற்காக அவர்கள் கூகுள் மேப் உதவியைப் பயன்படுத்தியுள்ளனர். மாணவர்கள் மலையேற்றத்தை முடித்துவிட்டு மீண்டும் கீழே இறங்கி வந்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த இரும்புப் பொருளை எமன்சு யாதவ் (21) என்ற மாணவர் காலால் உதைக்கும் போது, அது கல்லில் மோதி வெடிக்க பலத்த காயம் அடைந்து நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார், மேலும் இரு மாணவர்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்டதால் செங்கல்பட்டு அரரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாம்பரம் துணை ஆணையர் மற்றும் கூடுவாஞ்சேரி உதவி ஆணையர் தலைமையிலான போலீசார், வெடிப்பு நேரிட்ட விதம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications