அரையாண்டு விடுமுறை.. டூர் பிளான் பண்ணியாச்சா.. கொடைக்கானல் பக்கத்துல பலருக்கும் தெரியாத சூப்பர் இடம்
கொடைக்கானல்: கொடைக்கானல் பக்கத்தில் இருக்கும் அழகிய பகுதி தான் கூக்கால் கிராமம். கொடைக்கானலில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கூக்கால் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாடலாம். சிறப்பான அனுபவமாக இருக்கும்.

அரையாண்டு தேர்வுகள் சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் நாளையுடன் முடிகிறது. இதையடுத்து வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை உறுதியாகி உள்ளது. ஜனவரி 2ம் தேதி அல்லது ஜனவரி 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரையாண்டு தேர்வு விடுமுறை மட்டுமல்ல கிறிஸ்துமஸ் விடுமுறையும் வருகிறது. 24, 25 ஆகிய தேதிகளில் அரசு அலுவலங்கள், நிறுவனங்களில் விடுமுறை என்பதால் பலரும் வெளியூர்களில் இரண்டு நாள் தங்கி கிறிஸ்துமஸ் கொண்டாட விரும்புவார்கள். இதேபோல் அரையாண்டு விடுமுறையை ஜாலியாக என்ஜாய் பண்ண விரும்புவோரும் மலைவாசல் தளங்களை நோக்கி படை எடுப்பார்கள்.

நம்ம ஊர் மக்களை பொறுத்தவரை பொதுவாக ஊட்டி, கொடைக்கானலைத்தான் பெரிதும் விரும்புவார்கள். கொடைக்கானலுக்கு இந்த முறை போனால், நகரத்துடன் சுற்றிவிட்டு வராமல், கூக்கால் பகுதியில் போய் தங்கி சுற்றி பாருங்கள். வேறலெவல் அனுபவமாக இருக்கும். அடுத்த 10 நாளைக்கு தமிழகத்தில் பெரிதாக மழை இருக்காது என்று வானிலை மையம் கூறியுள்ளது. எனவே தாராளாக சுற்றுலா சென்று மலைபிரதேசங்களில் என்ஜாய் பண்ணலாம்.
கொடைக்கானலில் டிசம்பர் மாதம் குளிர் கடுமையாக இருக்கும் என்றாலும், முற்றிலும் பனி மூட்டமும், மஞ்சமூட்டமும் உங்களை சிலிர்க்க வைக்கும். ஹனிமூன் தம்பதிகள் இப்போது கொடைக்கானல் சென்றால் அற்புதமான அனுபவமாக இருக்கும். கொடைக்கானலில் பிரையண்ட் பூங்கா, மோயர் பாயிண்ட், பைன்மரக்காடு, பில்லர்ராக், குணாகுகை, நட்சத்திர ஏரி எல்லாவற்றையும் பார்த்து ரசித்தவர்கள், கூக்கால் பகுதிகளில் போய் தங்கலாம். அங்கு தங்கும் விடுதிகள் ஏராளமான உள்ளன.

கொடைக்கானலில் இருந்து கூக்கால் நோக்கி செல்லும் போது உள்ள பூம்பாறை கிராமம் மேகங்கள்அடிக்கடி வந்து ஓய்வெடுத்து செல்லும் இடமாக இருக்கும். மேகங்கள் வருவதும் விலகுவதும் சர்வ சாதாரணமாக இருக்கும். இது நிச்சயம் உங்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். அதேபோல் பூம்பாறையில் புகழ் பெற்ற குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது. இந்த கோயில் ஆன்மீகத்தை விரும்புவோருக்கு நிச்சயம் பிடிக்கும். அதேபோல் பூம்பாறை கிராமத்தை தாண்டி சென்றால் மன்னவனூர் வரும். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டில் சூழல் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. அங்கு பசுமை புல்வெளிகளுக்கும், மலைமுகடுகளுக்கும் நடுவே சிறிய ஏரியும் இருக்கிறது. இந்த ஏரியில் பரிசல் மற்றும் படகு சவாரி, குதிரை சவாரி உள்ளிட்ட சுற்றுலா பயணிகளை கவரும் அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இங்கு உள்ள ஜீப்லைன் சாகசம் வேறலெவல் அனுபவத்தை தரும்..

அடுத்ததாக கூக்கால் கிராமத்திற்கு செல்லும் எழில் கொஞ்சும் மலைப் பாதைகள் மனதை மயக்கிவிடும். அங்கு அமைந்துள்ள நன்னீர் ஏரியும் காண்போரை மெய் சிலிர்க்க வைத்துவிடும். அதிலும் குறிப்பாக பசுஞ்சோலைக் காடுகளுக்கு மத்தியில் கூக்கால் கிராமத்தின் தூத்தூர் அருவி உங்களுக்கு நல்ல ஒரு அனுபவத்தை தரும். கூக்கால் கிராமத்தின் தூத்தூர் அருவி, இன்றளவும் தென்னிந்தியாவின் அதிகம் விரும்பும் அருவிகளில் 2-வது இடத்தில் இருக்கிறது. இந்த பகுதியில் ஏராளமான சிறிய கிராமங்கள் உள்ளன. இதுவும் ரசிக்கும் வகையில் இருக்கும். கொடைக்கானல் முதல் கிளாவரை உள்ள இந்த பகுதி உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். போய் பாருங்கள்.












Click it and Unblock the Notifications