சென்னை கோவளம் அருகே ரூ 100 கோடியில் நந்தவனம் பாரம்பரிய பூங்கா! ஈசிஆரில் புதிய டூரிஸ்ட் ஸ்பாட்!
சென்னை: சென்னை கோவளம் அருகே ரூ 100 நந்தவனம் பாரம்பரிய பூங்கா அமைக்கப்படவுள்ள நிலையில் சென்னை மக்களுக்கு கிழக்கு கடற்கரைச் சாலையில் மற்றொரு சுற்றுலா தலம் தயாராகவுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ளது.
சென்னையில் வாரந்தோறும் குழந்தைகளை ஷாப்பிங் மால்கள், பூங்காக்கள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், செம்மொழி பூங்கா, சேத்துபட்டு ஈகோ பார்க், கடற்கரை, கோயில்கள், சிறிய விளையாட்டு ஜோன்கள் என அழைத்துச் செல்வது உண்டு.

இதை விட்டால் கிழக்கு கடற்கரைச் சாலையில் கோவளம் கடற்கரை, முட்டுக்காடு, மகாபலிபுரம், சாய்பாபா கோயில் உள்ளிட்ட இடங்களும் உள்ளன. போன இடங்களுக்கே போய் குழந்தைகளுக்கு சலிப்பு தட்டிவிட்டது.
இந்த நிலையில் ஈசிஆரில் தற்போது மற்றொரு சுற்றுலா தலம் சென்னை மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையவுள்ளது. ஈசிஆரில் கோவளத்திற்கு அருகே நந்தவனம் பாரம்பரிய பூங்கா எனப்படும் ஒரு பூங்காவை தமிழக சுற்றுலாத் துறை அமைக்க போகிறது.
இதன் மொத்த பரப்பளவு 223 ஏக்கர்களாகும். இந்த பூங்கா கட்ட ரூ 100 கோடி செலவு செய்யப்படுகிறது. பூங்காவானது திறக்கப்பட்டால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். 6 நுழைவு வாயில்களுடன் இரு கடைகள் அமைக்கப்படவுள்ளன.
அது போல் இரு ஸ்டார் ஹோட்டல்கள் வரவுள்ளன. இந்த பூங்காவில் தலா 1920 கார்களும் பைக்குகளும் என மொத்தம் 4000 வாகனங்களை நிறுத்தலாம். சமூக நிகழ்வுகளை நடத்துவதற்கான அரங்கங்கள், நடைபாதைகள், படகு சவாரி, திறந்தவெளி திரையரங்குகள் உள்ளிட்டவை அமையவுள்ளன.

இங்கு சோலைவனம், விஹாரம், மைதானம் ஆகிய 3 பகுதிகள் பிரிக்கப்படுகின்றன. அதாவது சோலைவனத்தில் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். கோயில்கள், சிலைகள், உள்ளிட்டவைகளில் மினியேச்சர்கள் அமைக்கப்படுகின்றன.
அது போல் இசை பூங்கா, கலை நிகழ்ச்சி நடத்துவதற்கான அரங்கம், கை வேலைப்பாடுகளால் செய்யப்பட்ட பொருட்களின் அரங்கு உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும். அது போல் விஹாரம் என்பது முழுக்க முழுக்க குழந்தைகள் விளையாட்டு மைதானம், கிரகங்களின் தோட்டம், பூந்தோட்டம் உள்ளிட்டவை உள்ளன.
அது போல் மைதானம் என்ற இடமானது 13 ஏக்கர் பகுதியை கொண்டது. இங்கு 25 ஆயிரம் பேர் வரை கூடும் அளவுக்கு விசாலமானது. வாலிபால், டென்னிஸ், கூடைப்பந்து விளையாட்டுகளை விளையாடலாம்.கடற்கரைக்கு செல்ல இரு சாலைகளும் கடைத்தெருக்களாக அமைகிறது.இந்த பூங்கா அமைப்பதற்கான திட்டங்கள் தயார் செய்யப்பட்டு நிலங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்கும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications