தேனி வங்கி அதிகாரி குரங்கணி அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்
தேனி: தேனி வழியாக மூணாறு செல்லும் பலரும் விரும்பி செல்லும் இடம் குரங்கணி. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக வருகிறார்கள். இங்கு அடிக்கடி கால நிலை மாற்றம் ஏற்படும். திடீரென மழை பெய்யக்கூடிய பகுதியாக இருக்கிறது. காட்டாறுகளில் எப்போது வேண்டுமானாலும் வெள்ளம் வரும் வாய்ப்புகள் உள்ளது. இந்த ஆற்றில் குளிக்க போன தேனி மாவட்டம் போடி தனியார் வங்கி அதிகாரி உள்பட இரண்டு பேர் இப்போது உயிருடன் இல்லை.
தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று தான் குரங்கணி. மேற்கு தொடா்ச்சி மலையில் அமைந்துள்ளது. குரங்கணி, போடியில் இருந்து 16 கி.மீ. தொலைவிலும், தேனியிலிருந்து 31 கி.மீ தொலைவிலும் அமைந்திருக்கிறது. போடி நகரின் எல்லையான முந்தலில் இருந்து மலையில் ஏறினால் போடி மெட்டு, பூம்பாறை, மூணாறு போகலாம். அப்படியே முந்தலில் இருந்து திரும்பாமல் நேரடியாக சென்றால் குரங்கணி வரும். குரங்கணி அருகே உள்ள கொட்டக்குடி கிராமம் கும்கி, மைனா, அவன் இவன் உள்பட பல்வேறு திரைப்படங்கள் எடுக்கப்பட்ட இடமாகும். மலைக்கு நடுவில் உள்ள அற்புதமான கிராமங்கள் தான் குரங்கணியும், கொடக்குடியும். கிளைமேட் மிக அருமையாகஇருக்கும். அங்குள்ள அருவிகளில் எப்போதுமே தண்ணீர் வரத்து இருக்கும்.

குரங்கணி அருவி
இந்த மலையில் பாயும் ஓடையின் கிழக்கே குரங்கணி மலைகளும் மேற்கில் கொளுக்குமலை ஆகியவை அமைந்திருக்கிறது. இந்த மலைகளானது அடிக்கடி மழை பெய்யும் சூழல் உடையவை. எப்போதுமே குளிர்ந்த காலநிலையும், வலுவான காற்றையும், மேகக்கூட்டங்களையும் காண முடியும். இந்த மலையில் இந்திய கடமா, குரைக்கும் மான், லங்கூர்கள், இந்தியப் பாலைவனப் பூனை ஆகியவை உள்ளன. மேலும் சிறுத்தை மற்றும் புலி ஆகியவையும் உள்ளன. குரங்கணிஆற்றை பொறுத்தவரை ஏராளமான சிற்றோடைகள் உள்ளன. இவை அனைத்தும் கொட்டக்குடி ஆற்றில் சேருகின்றன. இங்கு குளிப்பதற்காகவும், காலநிலையை அனுபவிப்பதற்காகவும் பலர் வருகிறார்கள். குறிப்பாக சனி, ஞாயிறு உள்பட விடுமுறை நாட்களில் 100க்கணக்கனோரை பார்க்க முடியும்.

தனியார் வங்கி ஊழியர்
அப்படித்தான் தேனி மாவட்டம் போடி பகுதியைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ஜஹாங்கீர் மற்றும் அவரது உறவினர் மதுரையைச் சேர்ந்த மஜீத் ஆகியோர், நேற்று விடுமுறையையொட்டி குடும்பத்துடன் குரங்கணி சுற்றுலா பகுதியில் சென்றனர். அங்கு கொட்டக்குடி ஆற்றில் குளித்துவிட்டு மாலை 6 மணியளவில் ஆற்றை கடக்க முயன்றபோது திடீரென ஏற்பட்ட காட்டாறு வெள்ளத்தில் இருவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.
உடல்கள் மீட்பு
உறவினர்கள் அளித்த தகவலின் பேரில், வருவாய்த்துறையினர், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் தேடல் நிறுத்தப்பட்ட நிலையில், இன்று அதிகாலை அவர்கள் அடித்து செல்லப்பட்ட இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் கரை ஒதுங்கிய நிலையில் இருவரது உடல்களும் மீட்கப்பட்டன.
நரிப்பட்டி-கொட்டக்குடி ஆறு
சடலங்களை போடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், தொடர்ச்சியாக நரிப்பட்டி-கொட்டக்குடி ஆற்றில் உயிரிழப்புகள் ஏற்படுவதால், பொதுமக்கள் செல்லாதவாறு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு தடைகள் விதிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications