பொள்ளாச்சி போயிட்டு புளியம்பட்டி பாணியில்.. கும்பக்கரை போயிட்டு கொடைக்கானல் போங்க.. இப்ப செம்ம!
தேனி: பொள்ளாச்சி போயிட்டு புளியம்பட்டி போகனும்னு சூர்ய வம்சம் படத்துல சொல்லுவாங்களே.. அந்த மாதிரி கும்பக்கரை போய்ட்டு கொடைக்கானல் போய் பாருங்க.. இந்த அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு போனால் வேறலெவல் அனுபவமாக இருக்கும்
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு இந்த அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு செல்ல திட்டமிட்டுள்ளீர்களா.. உங்களுக்குத்தான் இந்த பதிவு..

கொடைக்கானலில் இப்போது அருமையான வானிலை நிலவுகிறது. அதேநேரம் கிறிஸ்துமஸ் விடுமுறையின்போது மழை எல்லாம் முற்றிலும் நின்றுவிடும் என்பதால், இனிமையான அனுபவமாக இருக்கும். அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாடி மகிழ கொடைக்கானல் சிறந்த இடமாக இருக்கும்.
அதேநேரம் கொடைக்கானலுக்கு பலரும் வத்தலக்குண்டு, காட்ரோடு வழியாக நேரடியாக செல்வார்கள். அவர்கள் இந்த முறை பெரியகுளம் வந்து, அங்கிருந்து கும்பக்கரை போய் குளித்துவிட்டு அங்குள்ள இயற்கையை ரசித்துவிட்டு கொடைக்கானலுக்கு அப்டியே செல்லலாம். இது புதிய அனுபவமாக இருக்கும்,
கும்பக்கரை அருவி பெரியகுளம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் இயற்கை எழில் சூழ அமைந்திருக்கிறது. இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்வார்கள். அதேநேரம் இந்த அருவிக்கு தண்ணீர் கொடைக்கானலில் இருந்து வருகிறது. இந்த அருவியில் தண்ணீர் திடீர் திடீரென அதிகமாகும். கடந்த 2 மாதங்களாக அடிக்கடி தொடர் மழை பெய்ததால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தே காணப்பபட்டது.
இதனைத்தொடர்ந்து அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த நவம்பர் மாதம் 4-ந்தேதி முதல் வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து சீராக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் இன்று (சனிக்கிழமை) முதல் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்திருக்கிறார்கள். 42 நாட்களுக்கு பிறகு அருவியில் குளிக்க அனுமதித்ததால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள். மற்ற அருவிகளை போல் கும்பக்கரை அருவி தண்ணீர் இல்லை. அதிக மூலிகைகளில் பட்டுவரும் அற்புதமான தண்ணீர் பாயும் அருவியாகும். இந்த அருவிக்கு பெரும்பாலான நாட்கள் தண்ணீர் வந்துகொண்டே தான் இருக்கும். எனவே கும்பக்கரை அருவிக்கு வந்து குளித்து மகிழ்ந்துவிட்டு அதன்பின்னர் கொடைக்கானல் போகலாம். இது வித்தியாசமான புதிய அனுபவமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications