கன்னியாகுமரியில் கடவுள் தேசத்தின் கனவுப்பாதை.. நம்பியவர்களை ஏமாற்றாத அற்புத அருவி
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான குமரி குற்றாலம் திற்பரப்பு அருவியில் தற்போதைக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த போதிலும் சிறிதளவு தண்ணீர் கொட்டி வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக வந்து குளித்தனர்.
தமிழ்நாட்டில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு என்றே போக விரும்பும் ஊர்களில் திற்பரப்பு அருவியும் ஒன்று. நாகர்கோவிலில் இருந்து திற்பரப்பு அருவி சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ளது. நாகர்கோவிலிலிருந்து தடிக்காரன்கோணம் அல்லது குலசேகரம் வழியாக ஒரு மணிநேரப் பயணத்தில் அங்கு சென்றுவிட முடியும்.

கோடையிலும் தண்ணீர் ஓரளவு வருகிறது. பொதுவாக குற்றால அருவிகள் கூட சில சமயம் கோடையில் வறண்டுவிடும், ஆனால் திற்பரப்பில் ஓரளவு தண்ணீர் எப்போதும் இருக்கக் காரணம் அதன் அணை அமைப்பு தான். இந்த அருவி கோதையாற்றின் மீது அமைந்துள்ளது. இந்த அருவிக்கு மேல்பகுதியில் உள்ள பேச்சிப்பாறை மற்றும் கோதையாறு அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மற்றும் அவற்றின் கசிவு நீர் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.
அதேபோல அருவிக்குச் சற்று முன்பாக ஒரு சிறிய தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இது கோடை காலத்திலும் தண்ணீரைத் தேக்கி வைத்து, சீராக அருவியில் விழச் செய்கிறது. இது இயற்கை நீர்வீழ்ச்சி என்பதை விட, ஓரளவிற்கு மனிதர்களால் முறைப்படுத்தப்பட்ட நீர்வீழ்ச்சியாக திகழ்கிறது.
திற்பரப்பு அருவியை பொறுத்தவரை பல அடி நீளத்திற்குப் பரந்து விரிந்து விழுகிறது. அருவியின் உயரமும் பயமுறுத்தும் வகையில் இருக்காது. இதனால் குழந்தைகளும் பெரியவர்களும் பயமின்றி குளிக்க முடியும். அருவியின் கீழே தண்ணீர் தேங்கும் இடம் ஆழம் குறைவாக இருப்பதால் நீச்சல் தெரியாதவர்களும் ஜாலியாக விளையாட முடியும்.
இப்படியான அற்புதமான திற்பரப்பு அருவியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த போதிலும் சிறிதளவு தண்ணீர் கொட்டி வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
அப்படி வரும் சுற்றுலா பயணிகளை திற்பரப்பு அருவி ஏமாற்றவில்லை... வெயிலின் தாக்கத்தை குறைத்துக் கொள்ள அருவியில் சிறிதளவு தண்ணீர் கொட்டுகிறது. அந்த பகுதிகளில் முண்டியடித்து கூட்டமாக நின்று குளித்து வெயிலின் தாக்கத்தை தணித்து செல்கின்றனர் மக்கள்
அதுபோல அருவியின் அருகாமையில் உள்ள நீச்சல் குளத்திலும் தங்கள் குழந்தைகளுடன் குடும்பமாக நீச்சல் அடித்து நீராடி மகிழ்ந்து செல்கின்றனர்.
அதேநேரம் அருவியின் மேல் பகுதியில் உள்ள கோதையாற்றில் இயங்கி வந்த படகு துறையின் படகு சவாரி தற்போது நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். எனினும் அருவிக்கு அருகிலேயே பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப்பாலம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மிக அருகிலேயே இருப்பதால், ஒரே நாளில் இந்த இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு செல்கிறார்கள்.














Click it and Unblock the Notifications