30 ஆயிரத்திற்கு ஆசைப்பட்டு மொத்தமும் போச்சு.. தென்காசி இன்ஸ்பெக்டருக்கு தேவையா இது! கடைசியில் இப்படி ஆகிடுச்சே
தென்காசி: தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவல் ஆய்வாளர் ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார். ஆள் கடத்தல் வழக்கை விரைவாக முடிப்பதாக கூறி சம்பந்தப்பட்டவரிடம் லஞ்சம் வாங்க முயன்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றமாகும். ஆனாலும் சிலர் தன் வேலைகளை விரைந்து முடிக்க சொல்லி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயல்கின்றனர். இப்படி சில சம்பவங்கள் அரங்கேறினாலும், உன் வேலையை முடிக்க வேண்டும் என்றால் லஞ்சம் தந்தால் தான் செய்வேன்.. இல்லையெனில் அந்த வேலையை செய்யாமல் காலம் தாழ்த்திவிடுவேன் என்று சொல்லி லஞ்சம் வாங்கும் அதிகாரிகளும் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் அவ்வப்போது கைது செய்யப்படுகிறார்கள்.

லஞ்சம் கேட்ட பெண் இஸ்பெக்டர்
அடிக்கடி இதுபோன்று கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் கூட இன்னும் சில அதிகாரிகள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படித்தான் தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்கை விரைந்து முடிக்க ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:-
நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் மீது கடையம் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று உள்ளது. ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக செல்வகுமார் மீது வழக்கு இருக்கும் நிலையில், இதற்காக தினமும் நிபந்தனை ஜாமீன் கையெழுத்து போட்டு வந்துள்ளார். வழக்கம் போல் நேற்று முன் தினமும் அவர் நிபந்தனை ஜாமீன் கையெழுத்து போட வந்தார்.
கையெழுத்து போட்டுவிட்டு செல்ல முயன்றபோது, செல்வகுமார் உங்களை வழக்கு தொடர்பாக இன்ஸ்பெக்டர் பேசுவதற்கு அழைப்பதாக காவலர் ஒருவர் கூறியுள்ளார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பெண் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்றால் ரூ.30,000 லஞ்சம் தந்தால் போதும். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் சீக்கிரமாக வெளியில் கொண்டு வர ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
கையும், களவுமாக கைது
செல்வகுமாரும் சரி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க மனமில்லாத செல்வகுமார் இது தொடர்பாக தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து பெண் இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று செல்வகுமாரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.30000 கொடுத்து அனுப்பினர்.
அதன்பேரில், கடையம் காவல் நிலையம் சென்று அங்கிருந்த இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதாவை சந்தித்து ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட மேரி ஜெமிதாவை அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications