நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்! தகராறை தட்டிக்கேட்ட போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு.. தப்பி ஓடிய கும்பல்
நெல்லை: நெல்லை பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் குடும்பத்துடன் பொழுதுபோக்க வந்த காவலருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. தகராறை தட்டிக்கேட்ட போது காவலர் முகம்மது ரஹ்மதுல்லாவை வெட்டிய கும்பல் தப்பி ஓடியுள்ளது. அரிவாள் வெட்டில் காயம் அடைந்த முகம்மது ரஹ்மதுல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம் வளாகத்தில் மாநகராட்சி சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாலை முதல் குழந்தைகள், குடும்பத்தினர் கூட்டம் அதிகமாக இருந்தது. இரவு 9 மணி அளவில் அங்கு நின்றிருந்த இளைஞர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது.

போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு
அப்போது அங்கு குடும்பத்தினருடன் வந்திருந்த போலீஸ்காரர், அவர்களை தட்டி கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த கும்பல் போலீஸ்காரரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் பூங்காவுக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கோண்டனர்.
இதற்கிடையே போலீஸ்காரர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று விட்டதாக தெரிகிறது. அரிவாள் வெட்டில் ஈடுபட்ட இளைஞர்களும் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து, பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்
மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் மாநகராட்சி பூங்காவில் தாக்குதலை தட்டி கேட்ட போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, நெல்லையில் காவல்துறையை சேர்ந்த ஒருவருக்கே அரிவாள் வெட்டுவிழுந்த சம்பவம், ரவுடி கும்பல் அராஜகத்தை காட்டுவதாக மனித நேய மக்கள் கட்சி கண்டித்துள்ளது.
இது குறித்து, மனிதநேய மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவர், K.S.ரசூல்மைதீன் MC வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:- "நெல்லை பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தில் இன்று 22.6.2025 குடும்பத்துடன் பொழுதுபோக்குக்கு வந்த மணிமுத்தாறு பட்டாலியன் காவலர் மேலப்பாளையம் உரைச் சேர்ந்த முகம்மது ரஹ்மத்துல்லாஹ் என்பவர் அப்பகுதியில் சண்டையிட்டு கொண்டுருந்த ரவுடி கும்பல்களிடம் நேரில் போய் தட்டி கேட்டதால் அவரை ரவுடி கும்பல்கள் கையில் மாறிமாறி அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர்.
ஆள் நடமாட்டம் அதிகம் இருந்த இடத்தில்
தற்போது அவர் படுகாயத்துடன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இக்கொடூர செயலை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ரவுடிகளின் இக்கொலைவெறிச்செயல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தப்பியோடிய குற்றவாளிகளை காவல்துறை கைது செய்து கடும் தண்டனை பெற்று தர வேண்டும். தமிழக அரசு அவருக்கு உயர்தரமான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும், மேலும் 25 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும். என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.











Click it and Unblock the Notifications