வற்றாத தாமிரபரணி இருந்தும்.. திருநெல்வேலியில் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு.. கொடுமையை பாருங்க
திருநெல்வேலி: வற்றாத ஜீவநதி பாயும் திருநெல்வேலி மாநகராட்சியில் பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு தவித்து வருகின்றனர். அதேபோல் திசையன்விளையிலும் தாமிரபரணி குடிநீர் சப்ளை சரியில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் வற்றாத ஜீவ நதியாக தாமிரபரணி ஓடுகிறது. இந்த தாமிரபரணி ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடும். இந்த ஆறு திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மக்களின் குடிநீர், விவசாயத்துக்கு ஆதாரமாக உள்ளது.

தாமிரபரணி ஆறு திருநெல்வேலி மாநகர் வழியாக தூத்துக்குடி மாவட்டத்தை நோக்கி பாய்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தென்மேற்கு பருவமழை பெய்தது. இதனால் தாமிரபரணியில் தண்ணீர் அதிகரித்தது.
அதேபோல் பாபநாசம் அணையிலும் போதுமான அளவு தண்ணீர் இருக்கிறது. இருப்பினும் திருநெல்வேலி மாநகராட்சிகளில் சில வார்டுகளில் தண்ணீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் 40, 4, 54, 55 ஆகிய நான்கு வார்டுகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிநீர் விநியோகக் குளறுபடியால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த மூன்றேகால் ஆண்டுகளில் குறைந்தபட்சம் 100 முறைக்கு மேல் பழுதுபார்க்கப்பட்ட குடிநீர் குழாய்களே இந்த அவலத்திற்குக் காரணம் எனப் பொதுமக்கள் குமுறுகின்றனர். புதிய குழாய் பதிப்பதற்கு ஐந்து முதல் பத்து லட்சம் ரூபாய் மட்டுமே செலவாகும் நிலையில், பழுதடைந்த குழாய்களைப் பழுதுபார்க்க மட்டும் சுமார் 40 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசின் நிதி வீணடிக்கப்படுவதோடு, பொதுமக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர் விநியோகமும் பாதிக்கப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குடிநீர் விநியோகம் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்து இந்தக் குளறுபடிகள் அதிகரித்துள்ளதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும்எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருநெல்வேலி மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் இவ்வளவு குளறுபடிகள் ஏற்படுவது மிகுந்த கண்டனத்திற்குரியது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதனைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் விரைவில் மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பிரச்சினைக்கு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
அதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை தாலுகா என்பது வறட்சிக்கு பெயர் பெற்றது. இந்த தாலுகாவில் போதிய மழை என்பது இருக்காது. இதனால் மக்களின் குடிநீர் தேவைக்கு சிக்கல் ஏற்படும். இப்படியான சூழலில் திசையன்விளை தாலுகாவிலும் தாமிரபரணி சப்ளை சரியில்லை என்ற புகார்கள் உள்ளன. இதனையும் அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.












Click it and Unblock the Notifications