லஞ்சம் வாங்குவதில் புது டெக்னிக்.. தென்காசி மின்வாரிய அதிகாரிக்கு பாடம் புகட்டிய விவசாயி
தென்காசி: தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே விவசாய நிலையத்தில் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவரிடம், ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். நேரடியாக லஞ்சம் வாங்கினால் மாட்டிக்கொள்வோம் என நினைத்து தன் நண்பர் ஒருவர் மூலமாக லஞ்சப் பணத்தை வாங்கிய நிலையில் அவரையும் சேர்த்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
லஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் ஒருவேளை கூட நடக்காது என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது. லஞ்சலாவண்யத்தை கட்டுப்படுத்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

லஞ்சம் வாங்கிய அதிகாரி
ஆனாலும் கூட லஞ்சம் என்பதை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. தினம் தினம் எங்காவது ஒரு அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கி அரசு அதிகாரிகள் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகவே உள்ளது. அப்படியான ஒரு சம்பவம்தான் தென்காசி மாவட்டத்தில் நடந்துள்ளது.
நேரடியாக வாங்கினால் மாட்டிக்கொள்வோம் என நினைத்து புத்திசாலித்தனமாக தனது நண்பர் வாயிலாக லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு விவசாயி ஒருவர் தக்க பாடம் புகட்டியுள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-
மின் இணைப்பு கேட்டு
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே கீழ விராணம் காமாட்சி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வகணேஷ். 30 வயதான இவர் விவசாயி. தனது தந்தை கருப்பசாமியின் விவசாய நிலையத்தில் மின் இணைப்பு கேட்டு அங்குள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இதையடுத்து, வீரகேளம்புதூர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து இளநிலை உதவி பொறியாளர் பிரேம் ஆனந்த் என்பவர் செல்வகணேஷை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது இலவச மின் இணைப்புக்கு மீட்டர் வைக்க வேண்டும். அதற்கு நிலத்திற்கான பட்டா, வில்லங்க சான்று போன்ற ஆவணங்களுடன் 10 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் விவசாயி செல்வகணேஷோ, தன்னால் அவ்வளவு பணம் தர முடியாது என்று கூறியுள்ளார். பின்னர் 7 ஆயிரமாக தாருங்கள் என்று பிரேம் ஆனந்த் கூறினார். ஆனாலும் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத செல்வகணேஷ், தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார்.
ரூ.7 ஆயிரம் லஞ்சம்
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், செல்வகணேஷிடம் ரசாயனம் தடவிய ரூ.7 ஆயிரத்தை கொடுத்தனுப்பினர். இந்த பணத்துடன் விவசாயி செல்வகணேஷ், வீரகேளம்புதூர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அங்கு இருந்த உதவி பொறியாளர் பிரேம் ஆனந்த், கலிங்கப்பட்டியை சேர்ந்த துரை என்ற தனது நண்பரிடம் இந்த பணத்தை கொடுக்குமாறு கூறியதோடு, அவரது செல்போன் எண்ணையும் கொடுத்துள்ளார்.
நண்பரையும் சேர்த்து கைது செய்த போலீசார்
சற்று நேரத்தில் செல்வகணேஷை தொடர்பு கொண்ட துரை என்ற நபர் வீரகேளம்புதூர்-வீராணம் சாலையில் வந்து பணத்தை பெற்று கொள்வதாக கூறினார். அதன்படி அங்கு வந்த துரையிடம் செல்வகணேஷ் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கையும் களவுமாக துரையை மடக்கி பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பாக உதவி பொறியாளர் பிரேம் ஆனந்தையும் கைது செய்தனர்.
நேரடியாக வாங்கினால் மாட்டிக்கொள்வோம் என்று நண்பர் வாயிலாக லஞ்சம் பணத்தை வாங்க திட்டமிட்ட உதவி பொறியாளர் பிரேம் ஆனந்த், தான் மாட்டியது மட்டுமல்லாமல் தனது நண்பர் துரையையும் சிக்க வைத்து இருக்கிறார். சுரண்டை அருகே இலவச மின் இணைப்புக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் மின் வாரிய அதிகாரி நண்பருடன் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.












Click it and Unblock the Notifications