விஜய் ஆட்சியிலும் காவல்துறை அத்துமீறல்! தென்காசியில் போலீஸ் தாக்கியதில்.. விவசாயி சோக முடிவு!
தென்காசி: தென்காசி அருகே சிவகிரி காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதால், மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்ற முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முந்தைய ஆட்சியில்தான் காவல்துறையின் அத்துமீறல்கள் இருந்தன. இந்த ஆட்சியிலும் இது தொடர்வது ஏன் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
நாங்கள் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று சொல்லிதான் விஜய் ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கிறார். இப்படி இருக்கையில், இந்த ஆட்சியிலாவது காவல்துறை அத்துமீறல்கள் முடிவுக்கு வருமா? என்று பலரும் எதிர்பார்த்திருக்கின்றனர்.

என்ன நடந்தது?
தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியைச் சேர்ந்த 65 வயதான அந்தோனிராஜ் இடப்பிரச்சனை தொடர்பாக விசாரணைக்காக கடந்த 21ம் தேதி மாலை 6.30 மணிக்கு காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டதாக தெரிகிறது. வழக்கமாக இடம் பிரச்சனை எனில் நீதிமன்றம் சென்றால் ஆண்டு கணக்கில் இழுத்தடிக்கப்படும். எனவே முடிந்தவரை பஞ்சாயத்து பேசி முடித்துக்கொள்வதுதான் தீர்வு என பலரும் கருதுகின்றனர். அப்படித்தான் இந்த விஷயத்திலும் நடந்ததாக சொல்லப்படுகிறது.
சிவகிரி காவல் ஆய்வாளர் முரளிதரன், அந்தோனிராஜை அவரது 3 வயது பேரன் முன்னிலையிலேயே கடுமையாக தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. காவல்துறையினரின் இந்தச் செயலால் மனமுடைந்த அந்தோனிராஜூ, காவல் நிலையத்திலேயே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.
விஷம் அருந்திய நிலையில் மீட்கப்பட்ட அந்தோனிராஜ், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தென்காசியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே காவல்நிலைய மரணங்களை தமிழ்நாடு நிறைய பார்த்திருக்கிறது. சமீபத்தில் கூடு சாத்தான்குளம் காவல் நிலைய மரண வழக்கில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்கையில், தற்போது மீண்டும் காவல் நிலையம் தொடர்பான மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications