சென்னை- நெல்லை வந்தே பாரத் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு.. ரயிலின் 9 பெட்டிகள்.. அதிர்ந்த பயணிகள்
நெல்லை: சென்னையில் இருந்து நெல்லை நோக்கி வந்துகொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது நெல்லை வாஞ்சி மணியாச்சி அருகே மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 9 ரயில் பெட்டிகள் சேதம் அடைந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
அதிநவீன வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் சென்னை - கோவை, சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் மற்றும் சென்னை டூ நெல்லை மற்றும் கோவை - பெங்களூர் என என 4 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை முழுவதும் ஏசி வசதி கொண்டதாகும்.

தானியங்கி கதவுகள், பெரிய ஜன்னல் கண்ணாடிகள், சுழலும் இருக்கைகள் என பல்வேறு வசதிகளை கொண்டதாகும். அதி வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயிலில் பயணம் செய்ய பலரும் விருப்பபடுவதால் வந்தே பாரத் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஒரே வந்தே பாரத் ரயிலான சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் சேவையை தொடங்கியது.
வந்தே பாரத் ரயில்: இந்த ரயில் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடையும். சென்னை எழும்பூரில் இருந்து 2.50 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு 10.40 மணிக்கு வந்து சேரும். வாரத்திற்கு ஆறு நாட்கள் இயக்கப்படும் இந்த ரயில், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய 6 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.
கல்வீசி தாக்குதல்: சென்னைக்கு தொழில் நிமித்தமாகவும், கல்வி, மருத்துவம் என பல்வேறு காரணங்களுக்காகவும் வந்து செல்லும் பயணிகளுக்கு இந்த ரயில் சேவை மிகவும் பயனளிக்கும் வகையில் உள்ளது. சராசரியாக இந்த வந்தே பாரத் ரயில் 7 மணி நேரம் 50 நிமிடத்தில் சென்னையில் இருந்து நெல்லை இடையேயன 650 கி.மீட்டர் தூரத்தை கடந்து செல்கிறது. இந்த நிலையில்தான் இன்று வழக்கம் போல் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மணியாச்சி அருகே சென்ற போது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மர்ம நபர்கள் கல்வீசியதில் ரயிலின் 9 பெட்டிகள் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்ததாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. ரயிலின் ஜன்னல் கண்ணாடியில் கற்கள் வீசப்பட்டதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கல் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications