சுருளி அருவியில் இன்று காலை அப்படி ஒரு காட்சி.. பார்த்ததுமே.. தேனி வனத்துறை உடனே அதிரடி முடிவு
தேனி: தேனி மாவட்டம் சுருளி அருவிக்கு சுற்றுலா போறீங்களா.. அந்த முடிவினை சில நாள் தள்ளிப்போடுங்க.. ஏனெனில் சுருளி அருவி பகுதியில் யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் கனமழை பெய்யும் போது, கேரள எல்லையில் உள்ள தேனி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்வது வழக்கம். அந்த வகையில் கடந்த சில வாரங்களாக வெயில் கடுமையாக இருந்து வந்த தேனி மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டம் முழுவதுமே அடிக்கடி சாரல் மழையால் கிளைமேட் மொத்தமாக மாறி உள்ளது. குறிப்பாக கேரள எல்லையை ஒட்டியுள்ள போடி, கம்பம், குமுளி, தேவாரம் பகுதிகளில் பருவ நிலையே மாறி உள்ளது.

மழை காரணமாக முல்லை பெரியாறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதேபோல் அருவிகளிலும் தண்ணீர் வரத்து இப்போது அதிகரித்துள்ளது.. மேகமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நல்லமழை பெய்த காரணத்தால் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சுருளி அருவியில் தண்ணீர் வரத்து தற்போது நன்றாக உள்ளது.
சுருளி அருவியை பொறுத்தவரை தினமும் ஏராளமானோர் வந்து செல்லும் ஆன்மீக தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் விளங்கக்கூடிய பகுதியாகும். இந்த அருவியில் குளிப்பதற்காக நாள்தோறும் வெளி மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த சுருளி அருவி மலை அடிவாரத்தில் அடர்ந்த வனப்பகுதிகளை ஒட்டி உள்ளது.மேகமலை அடிவாரமான இந்த பகுதிகளில் யானை, காட்டெருமை, மான், கரடி போன்ற வனவிலங்குகள் வாழ்கின்றன. இந்த நிலையில், இன்று (ஜூலை 01) சுருளி அருவிக்கு நீர் வரத்து அருமையாக உள்ள நிலையில் அருவி பகுதிக்குச் செல்லும் வன சாலையில் குட்டிகளுடன் கூடிய யானைகள் முகாமிட்டு அந்தப் பகுதியில் உலா வந்து கொண்டிருந்தது.
இதை கண்ட வனத்துறையினர், இதனால் பொது மக்களின் பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலாப் பயணிகள் சென்று குளிப்பதற்கு தடை விதித்தனர். மேலும், யானைகள் அப்பகுதில் இருந்து கடந்து சென்ற பின்பு தான் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே சுற்றுலா செல்வோர் சுருளி அருவியில் குளிக்க அனுமதி உண்டா என்பதை அறிந்துவிட்டு செல்லுங்கள். அதேபோல் வாகமன், மூணாறு, தேக்கடி, கொழுக்குமலை போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்வோர். அங்கு நிலைமை தற்போது சீராக உள்ளதா என்பதை அறிந்துவிட்டு செல்லுங்கள். கடந்த சில நாட்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.












Click it and Unblock the Notifications