வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்.. புத்தாண்டில் ஊர்ந்த வாகனங்கள்.. ஸ்தம்பித்த மலை சாலை
கோவை: கோவை மாவட்டத்தின் மலை வாசல தலங்களில் புகழ் பெற்றது வால்பாறை.. இங்கு தற்போது கடும் கடும் பனிப்பொழிவு மற்றும் இதமான காலநிலை நிலவி வருகிறது. இதனை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் பிற மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். நேற்று புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஏராளமானோர் குவிந்தனர். இதனால் மொத்த சாலையும் ஸ்தம்பித்து போனது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆனைமலை மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் வால்பாறை மலைத்தொடர் இருக்கிறது. பொள்ளாச்சியில் இருந்து 65 கி.மீ தூரத்திலும் கோவையில் இருந்து 102 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது வால்பாறை. இங்கு தேயிலை தோட்டங்கள் நிறைந்த சுற்றுசுழல் மாசற்ற சூழலுடன், பசுமை போர்த்திய மலைகள் மற்றும் அழகிய காடுகளால் மிகுந்த அருமையாக இருக்கும்.

அதேபோல் பொள்ளாச்யிலிருந்து வால்பாறைக்கு சாலையில் பயணிப்பதே அற்புதமான அனுபவமாக இருக்கும். தமிழ்நாட்டின் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக வால்பாறை இருந்து வருகிறது. நேற்று நள்ளிரவில் புத்தாண்டை வரவேற்று கொண்டாட வால்பாறை பகுதியில் நேற்று அதிகாலை முதல் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இதனால் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் வாகனங்கள், அரசு பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து மெதுவாக ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். இதனால் போலீசார், வாகனங்களை ஒழுங்குப்படுத்தி அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.
வால்பாறை நகரத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புத்தாண்டு நாளில் ஏராளமானோர் சுற்றிப்பார்க்க வந்ததால் நெரிசல் அதிகமாக இருக்கிறது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் பலப்படுத்தி உள்ளனர். மது அருந்திவிட்டு தவறான செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications