இந்தியாவில் இந்த 3 ரயில் நிலையங்களுக்கு செல்ல பாஸ்போர்ட் கட்டாயம்.. என்ன காரணம் தெரியுமா?
டெல்லி: இந்தியாவில் ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரயில் பயணம் ரிலாக்ஸாக இருக்கும் என்பதே பலரும் ரயில்களைத் தேர்வு செய்ய முக்கிய காரணமாகும். ஆனால், நமது நாட்டிலேயே சில பகுதிகளில் பாஸ்போர்ட், விசா இருந்தால் தான் ரயில் நிலையத்திற்குள் நுழையவே விடுவார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் முக்கியமான பொது போக்குவரத்து என்றால் அது ரயில்கள் தான். கட்டணம் குறைவு கிட்டதட்ட எல்லா முக்கிய நகரங்களுக்கும் கனெக்ஷன் இருக்கிறது உள்ளிட்ட காரணங்களால் மக்கள் ரயில்களில் செல்லவே விரும்புவார்கள்.

ரயில் பயணங்கள்: இதன் காரணமாகவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரயில் பயணங்களை எப்போதும் தேர்வு செய்வார்கள்.. சரி, ரயிலில் செல்ல என்ன தேவை? இதெல்லாம் ஒரு கேள்வியா.. டிக்கெட், டிரஸ், உணவு இருந்தால் போதுமே என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், சில ரயில்களில் செல்ல பாஸ்போர்ட் தேவை என்பது உங்களுக்கு தெரியுமா.. அதுவும் நமது நாட்டிலேயே பாஸ்போர்ட் இருந்தால் தான் இந்த ரயிலில் ஏற விடுவார்கள். அவ்வளவு ஏன் அந்த ரயில் நிலையத்திற்குள் செல்ல வேண்டும் என்றால் கூட பாஸ்போர்ட் தேவை. இது குறித்து நாம் பார்க்கலாம்.
சர்வதேச பயணம் என்றாலே எல்லாருக்கும் நினைவுக்கு வருவது விமானம் தான். பல ஆயிரம் கிமீ என்றாலும் சில மணி நேரத்தில் போய்விடலாம். சென்னையில் இருந்து துபாய்க்கு வெறும் 4.30 மணி நேரத்தில் செல்லாம். சிங்கப்பூருக்கு வெறும் 4 மணி நேரத்தில் செல்லாம். இப்படி எத்தனை தூரமாக இருந்தாலும் அதிகபட்சமே ஒரு சில மணி நேரம் தான் ஆகும். அந்தளவுக்கு விமான பயணங்கள் ஈஸி..
வெளிநாடுகளுக்குச் செல்லும் ரயில்: அதேநேரம் ரயில் மூலம் கூட நம்மால் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியும். ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்ற ரயில்கள் ரொம்பவே புகழ்பெற்றவை. ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் உள்ள நாடுகளில் பெரியளவில் கட்டுப்பாடு இருக்காது என்பதால் அங்கு இதுபோன்ற நாடு விட்டு நாடு இயக்கப்படும் ரயில்கள் அதிகம். விமானங்களில் செல்ல விரும்பாதோர், அல்லது வசதியான பயணத்தை விரும்புவோர் பொதுவாக ரயில்களைத் தேர்வு செய்வார்கள்.
பாகிஸ்தான் போகும் ரயில்: ஆனால், இந்தியாவிலும் கூட இதுபோல சில ரயில்கள் உள்ளன. அதில் முக்கியமானது சம்ஜௌதா எக்ஸ்பிரஸ். இந்த ரயில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் இணைக்கிறது. பஞ்சாபில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள அட்டாரி ரயில் நிலையத்தில் இருந்து பாகிஸ்கதானுக்கு இந்த ரயில் இயக்கப்பட்டது. இருப்பினும், இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்ததால் கடந்த 2019இல் இந்த ரயில் நிறுத்தப்பட்டது.
இந்த ரயில் பயணிப்போர் ரயில் நிலையத்திற்கு வெளியிலேயே பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்ட ஆவணங்களைக் காட்ட வேண்டும். கிட்டதட்ட விமானத்தைப் போல எல்லாவற்றையும் சோதனை செய்துவிட்டே உள்ளே உங்களை அனுமதிப்பார்கள்.
நேபாள ரயில்: அடுத்து பீகாரில் உள்ள ஜெய்நகர் ரயில் நிலையம்.. இது இந்தியா நேபாள எல்லையில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 39 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் நேபாளத்தின் ஜனக்பூரில் உள்ள குர்தா ரயில் நிலையம் வரை இயக்கப்படுகின்றன. இந்த ரயில் நிலையத்திலும் ஆவணங்கள் இருந்தால் மட்டுமே உள்ளே விடுவார்கள்.
வங்கதேச ரயில்: அடுத்து மேற்கு வங்கத்தில் உள்ள ராதிபூர் ரயில் நிலையம். மேற்கு வங்கத்தில் உள்ள தினாஜ்பூரில் அமைந்துள்ள இந்த நிலையம் இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே ரயில்களை இயக்குகின்றன. இது தவிர வங்கதேச எல்லையில் இருந்து வெறும் 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஹல்திபாரி ரயில் நிலையத்தில் இருந்தும் நாம் நேரடியாக வங்கதேசத்திற்குச் செல்லலாம்.
பாகிஸ்தானுக்குச் செல்லும் ரயில் நிறுத்தப்பட்ட போதிலும் மற்ற ரயில்கள் இன்னுமே இயங்கி வருகின்றன. எனவே, இந்த ரயில் நிலையங்களில் நீங்கள் செல்ல வேண்டும் என்றால் உங்களுக்கு நிச்சயம் பாஸ்போர்ட் தேவைப்படும்.












Click it and Unblock the Notifications