ஆம்னி பேருந்து vs சுற்றுலா பேருந்து.. ஆல் இந்தியா பெர்மிட்டில் இப்படி ஒரு விஷயமா.. அரசு வார்னிங்
தேனி: அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு பெற்றுக் கொண்டு சுற்றுலா வாகனங்கள் விதிமீறலில் ஈடுபடுவதால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு பெற்றுக் கொண்ட பேருந்துகள், சுற்றுலாப் பயணிகளை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லாமல் பல இடங்களில் பயணிகளை, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் ஏற்றி, இறக்கி அல்லது தமிழ்நாட்டிற்குள் ஏற்றி, இறக்கி பயணிகள் பேருந்து போல் இயக்கப்படுகின்றன. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் பிரிவு 88 (9) கனரக ஒப்பந்த வாகனங்கள் குறிப்பாக ஆம்னி பேருந்துகளுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்ல அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு வழங்க அதிகாரம் அளிக்கிறது. அதாவது சுற்றுலா பயணிகள் யாத்திரை, திருமணம், சுற்றுலா நோக்கங்களுக்காக பார்வையிடுதல் போன்ற காரணங்களுக்காக அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.
சமீபத்திய புகார்களின் அடிப்படையில், ஆராய்ந்ததில் இந்த அனுமதிச்சீட்டு பெற்ற வாகனங்கள் பெரும்பாலும் வழங்கப்பட்ட அனுமதிக்கு உட்பட்டு செயல்படாமல் வேறுவகையில் செயல்படுகின்றன என்று தெரிய வருகிறது.
ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுற்றுலாப் பயணிகளை சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்லாமல் பல இடங்களில் பயணிகளை, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் ஏற்றி, இறக்கி அல்லது தமிழ்நாட்டிற்குள் ஏற்றி, இறக்கி பயணிகள் பேருந்து போல் இயக்கப்படுகின்றன. பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ், இ-டிக்கெட் மற்றும் பேருந்து டிக்கெட் முன்பதிவு செயலிகள் மூலம் மின்னணு முறையில் டிக்கெட்டுகளை வழங்குவதன் மூலம் தனிநபர்களிடம் இருந்து தனித்தனியாக (சுற்றுப்பயண குழு அமைப்பாளரிடம் இருந்து அல்ல) கட்டணத்தை வசூலிப்பதாக தெரிய வருகிறது.
ஒரு மாநிலத்தில் இருந்து பயணிகளை ஏற்றி சுற்றுலா வாகனம் போல் இயக்காமல் வெவ்வேறு மாநிலத்தில் பல இடங்களில் இறக்கி விடுதல், அகில இந்திய சுற்றுலா வாகனங்கள் (அனுமதி) விதிகள் 2023-க்கு எதிரானது. மேலும், சுற்றுலாத் திட்டம் மற்றும் ஒப்பந்தத்தின்படி, பயணிகள் பட்டியலை மின்னணு அல்லது காகித வடிவில் பராமரிக்காமல் இயக்குவதாக தெரிய வருகிறது.
எனவே, நிபந்தனைகளின் ஒப்பந்தத்தின்படி திட்டமிட்ட பாதை மற்றும் தேதியைப் பின்பற்றாமல் இருப்பது, போக்குவரத்து விதிகளின்படி குற்றமாகும். மேலும், விதிமுறைகளை மீறுவதன் மூலம் மாநில அரசுக்கு கணிசமான வருவாய் இழப்பை ஏற்படுகிறது.
சுற்றுலா வாகனம் எப்பொழுதும் சுற்றுலாப் பயணிகளின் பட்டியலை மின்னணு வடிவிலோ அல்லது காகித வடிவிலோ வைத்திருக்க வேண்டும். அதில் ஒவ்வொரு சுற்றுலா பயணிகள் புறப்படும் இடம் மற்றும் சேருமிடம் பற்றிய விவரங்கள் இருக்கும் வகையில் சுற்றுலா வாகன ஏற்பாட்டாளர்கள் சுற்றுலாப் பயணிகளின் பதிவுகளை பராமரிக்க வேண்டும். சுற்றுலா வாகனங்கள் தமிழ்நாடு அரசின் நிபந்தனைகளை மீறினால், சட்டங்கள் மற்றும் விதிகளின்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications