ஒகேனக்கல் அருவியில் ஒரே நாளில் நடந்த அருமையான மாற்றம்.. சுற்றுலா போனவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
தர்மபுரி: தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் அருமையாக கொட்டுகிறது. ஒகேனக்கல் பகுதியிலும் கிளைமேட் அருமையாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒகேனக்கலுக்கு சுற்றுலா செல்வதற்கு இந்த வாரம் அருமையாக இருக்கும் என்று உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள்.
தமிழகத்தின் முக்கியமான சுற்றுலா தலங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற பகுதிகளுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் சென்று வருகிறார்கள். அதேபோல் மூணாறு,தேக்கடி, வாகமன், கும்பக்கரை அருவி, சுருளி அருவி, மேகமலை என பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். அருவிகளில் குளித்து மகிழ விரும்புவோருக்கு ஒகேனக்கல் இப்போது அற்புதமான இடமாக இருக்கிறது. ஒகேனக்கலுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கலை பொறுத்தவரை அருவியில் குளியல், கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் எங்கு திரும்பினாலும் ஆர்ப்பரித்தபடி கொட்டும் தண்ணீர், மனம் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு பரிசல் பயணம், மசாஜ் செய்து குளியல், நன்கு நீச்சல் தெரிந்தவர்கள் சென்று குளிக்க ஏற்ற இடங்கள், அங்கேயே பிடித்து பரிமாறப்படும் மீன்கள், நல்ல சுவையான சாப்பாடு என பிரமாதமாக இருக்கும்.
இயற்கை அழகை ரசிக்கவும், குளிக்கவும் பெங்களூரில் இருந்தும் சென்னையில் இருந்தும், கோவையில் இருந்தும் பலர் தற்போது வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்கிறது. அந்த வகையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நேற்று முன்தினம் வினாடிக்கு 2,500 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,500 கனஅடிக்கு கீழே இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1,363 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இந்தநிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கோடை மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது.
நேற்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 323 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 107.75 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று காலை 107.81 அடியாக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications