"ருத்ர தாண்டவம்!" சென்னை உட்பட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை கொட்டும்.. கவனம் மக்களே
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மொத்தம் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களிலும் கணிசமாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை நம்மை ஏமாற்றிவிட்ட போதிலும், வடகிழக்கு பருவமழை தமிழகத்திற்கு நல்ல மழையைக் கொடுத்து வருகிறது.

தொடர்ச்சியாக பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மாநிலத்தில் இருக்கும் அனைத்து நீர்நிலைகளும் நல்ல நிலையில் உள்ளன. மழை தொடரும் நிலையில், அவை வேகமாக நிரம்பி வருகிறது.
கொட்டிய கனமழை: தமிழகத்தில் நேற்றிரவு முதல் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடியக் கனமழை கொட்டி வருகிறது. அதிகாலை முதலே பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம், பல்லாவரம், போரூர், கோட்டூர்புரம் தி நகர், மாம்பலம், எழும்பூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை மட்டுமின்றி பல்வேறு புறநகர்ப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் மட்டும் கனமழையும் பெய்து வருகிறது. முன்பு சென்னையில் மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. ஆனால், திடீரென நள்ளிரவு முதலே கனமழை பெய்ய தொடங்கியது. கனமழை தொடரும் நிலையில், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணி நேரம்: இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்குச் சென்னை உட்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், அது தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் என 12 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இந்த மழை பெய்கிறது. முன்னதாக வானிலை ஆய்வு மையம் வங்கக் கடலில் வரும் 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவும் என்றும் அது வரும் 29இல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை மழைக்கு என்ன காரணம்: சென்னையில் இன்று அதிகாலை முதலே பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் உற்சாகத்தில் உள்ளனர். மழை மேகங்கள் அடர்த்தியாக இருக்கும் இடங்களில் கனமழை பெய்து வந்தது. கடல் பகுதியில் இருந்து திடீரென நுழைந்த மழை மேகங்களால் நகரில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
முன்னதாக நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. மேலும், இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications